Last Updated : 12 Mar, 2021 08:59 AM

 

Published : 12 Mar 2021 08:59 AM
Last Updated : 12 Mar 2021 08:59 AM

அஸ்வினின் டி20 வாய்ப்பு முடிவுக்கு வருகிறதா? சுந்தர் சிறப்பாகச் செயல்படும் போது அஸ்வினை எவ்வாறு சேர்ப்பது?  விராட் கோலி சூசகம்

ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம்

இந்திய டி20 அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைப்பது ஏறக்குறைய முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு கேப்டன் விராட் கோலி சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினின் பங்களிப்பு அளப்பறியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஒரு போட்டியில் சதம் அடித்தார்.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியபோதிலும் அவரை இந்திய டி20 அணி்க்குள் எடுக்கத் தயங்குகின்றனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வினின் பந்துவீச்சில் அதிரடி வீரர்களான ரோஹித் சர்மா, கெய்ரன் பொலார்ட், டீ காக், கோலி, டேவிட் வார்னர், கிறிஸ் கெயில், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் என பலர் ஆட்டமிழந்தபோதிலும் அஸ்வினை டி20 தொடருக்குள் எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பாக விராட் கோலி, காணொலியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அஸ்வின் டி20 எதிர்காலம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி வைக்கப்பட்டது.

அதற்கு கோலி அளித்த பதிலில் “ வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக சமீப காலமாக பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதிலும் டி20 அணிக்கு சிறப்பான வீரராக வாஷிங்டன் இருக்கிறார்.

ஒரேமாதிரி தன்மையுள்ள இரு சுழற்பந்துவீச்சாளர்களைய ஒரு இடத்துக்காக நாம் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் சுந்தர் இந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடியிருந்தால், அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், இதுபோன்ற கேள்வியை தர்க்கத்தின் அடிப்படையில்தான் கேட்க வேண்டும்.

இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படும்போது, எங்கிருந்து அஸ்வினை விளையாடச் செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள். கேள்வியை எளிதாகக் கேட்டுவிடலாம், அதற்கு தர்க்கரீதியாக விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கடந்த இரு ஐபிஎல் தொடரிலும் பவர்ப்ளேயில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தான் முதலிடத்தில் இருக்கிறார். வாஷிங்டந் சுந்தர் பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளார், ஆனால், எக்கானமியைப் பொறுத்தவரை இருவரும் 6.87 சராசரி வைத்துள்ளனர்.

சுந்தர் 26 டி20 போட்டிகளில் விளையாடி 6.95 எக்கானமி வைத்து 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் பந்துவீச்சில் 6.97 எக்கானமி வைத்து 52 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஏறக்குறைய இருவரும் ஒரேமாதிரியான எக்கானமி வைத்துள்ளார்கள்.

ஆனால் பேட்டிங்கைப் பொறுத்தவரை சுந்தர்15 போட்டிகளில் 111 ரன்கள் சேர்த்து சராசரியாக 18.5 ரன்கள் வைத்துள்ளார். ஆனால், அஸ்வின் 37 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

வருண் சக்ரவர்த்தி குறித்து விராட் கோலி குறிப்பி்டுகையில் “ இந்திய கிரிக்கெட் அணியில் உருவாக்கப்பட்டுள்ள உடற்தகுதி முறையை ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் வீரர்கள் தயாராக வேண்டும்.

இந்திய அணி மிகவும் உயர்ந்த தரத்திலான உடற்தகுதியை வீரர்களிடம் எதிர்பார்க்கிறது, பின்பற்றுகிறது. இந்திய அணி என்ன மாதிரியான உடற்தகுதியை எதிர்பார்க்கிறதோ அதற்கு பணிந்து வீரர்கள் தயாராக வேண்டும். உடற்தகுதி விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x