Published : 01 Mar 2021 07:39 PM
Last Updated : 01 Mar 2021 07:39 PM

அஸ்வின் சரியாக நடத்தப்படவில்லை எனப் பல முறை வேதனைப்பட்டுள்ளேன்: முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் வேதனை

ரவிச்சந்திரன் அஸ்வின்: கோப்புப் படம்.

மும்பை, 

இந்திய அணியால் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக நடத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அஸ்வின் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலியப் பயணத்திலிருந்து அஸ்வின் தனது திறமையைத் தொடரந்து நிரூபித்து வருகிறார். அது பேட்டிங் மட்டுமல்லாது, பந்துவீச்சிலும் அஸ்வின் திறமை வெளிப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி டெஸ்ட் மற்றும் காபா டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சும், பேட்டிங்கும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அஸ்வின் பந்துவீச்சு அமைந்திருந்தது. இதனால்தான் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடிந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பினார். சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சதம் விளாசினார் அஸ்வின். அகமதாபாத் டெஸ்ட் போட்டியின்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை அஸ்வின் எட்டினார்.

ஆனால், ஏனோ இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் அஸ்வினுக்குத் தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டு வருகிறது. அஸ்வினுக்கு உரிய முக்கியத்துவம் இந்திய அணியில் அளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு நீண்ட காலங்களுக்கு முன்பே அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எப்போதெல்லாம் இந்திய அணி ஆசியக் கண்டத்தை விட்டு வெளியே வெளிநாடுகளில் சென்று விளையாடுகிறோமோ அப்போதெல்லாம் நான் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறேன்.

அப்போது அஸ்வின் சில கடினமான முடிவுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அஸ்வின் ஏதாவது ஒரு சில ஓவர்கள் மோசமாகப் பந்துவீசினால், அல்லது ரன்களை வாரிக் கொடுத்துவிட்டால், அடுத்த சில போட்டிகளுக்கு அவரை அணியில் வாய்ப்புக் கொடுக்காமல் அமரவைத்துவிடுவார்கள். அஸ்வின் சரியாக அணியில் நடத்தப்படவில்லையோ என்று நான் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இப்போது அஸ்வின் உண்மையான மேட்ச் வின்னராக மாறி முன்னேறி வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியில் மட்டும் இப்போது அஸ்வின் மதிக்கப்படவில்லை. ஏராளமான ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அஸ்வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

நிச்சயமாகச் சிறந்த ஆல்ரவுண்டராக அஸ்வின் வருவார். முழுமையான ஆல்ரவுண்டராக மாறுவார் என நம்பினார்கள். அணி பல போட்டிகளில் இக்கட்டான நேரங்களில் சிக்கியபோது, அஸ்வின் ரன்கள் அடித்துக் கொடுத்துக் காப்பாற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் அஸ்வின் காரணமாக இருப்பார்'' என்று சபா கரீம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x