Last Updated : 01 Mar, 2021 03:16 AM

 

Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: ‘பெண் ஹெர்குலஸ்’ பிறந்தநாள்

பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான குஞ்சராணி தேவி பிறந்தநாள் இன்று (மார்ச் 1).

பளுதூக்கும் போட்டியில் இந்தியப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் குஞ்சராணி தேவி. ‘பெண் ஹெர்குலஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், மணிப்பூரில் உள்ள இம்பால் நகரில் 1968-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே ஹாக்கி, கால்பந்து, ஓட்டம், வலுதூக்கும் போட்டி (பவர் லிஃப்டிங்) என்று பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வந்தார். 1982-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷா பதக்கங்களாக அள்ளிக் குவிக்க, அவரைப் போலவே தானும் விளையாட்டில் பெரிய நட்சத்திரமாக வர விரும்பினார்.

இந்தச் சூழலில், பள்ளியில் இருந்த குஞ்சராணியின் பயிற்சியாளர், சற்று குள்ளமான அவரது உடல்வாகு, வலுதூக்கும் போட்டிகளுக்கு ஏற்றதாக இருப்பதாக அறிவுரை கூறியுள்ளார். பயிற்சியாளரின் இந்த அறிவுரையை ஏற்ற குஞ்சராணி தேவி, இந்த விளையாட்டில் பயிற்சியை தீவிரப்படுத்தினார். 1985-ம் ஆண்டில் நடந்த முதலாவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் (வெயிட் லிஃப்டிங்) போட்டி சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலுதூக்கும் போட்டிக்கு பதிலாக பளுதூக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தினார் குஞ்சராணி தேவி.

1987-ம் ஆண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் 2 தேசிய சாதனைகளைப் படைத்தவர், அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் தடம் பதித்தார். 1990 மற்றும் 1994-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், உலக பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

மத்திய அரசின் அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள குஞ்சராணி தேவி, வடகிழக்கு மாநில விளையாட்டு வீரர்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x