Published : 26 Feb 2021 04:07 PM
Last Updated : 26 Feb 2021 04:07 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் யாருக்கு வாய்ப்பு? இந்தியாவைத் தடுக்குமா இங்கி; ஆஸி.க்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா?

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் அஸ்வினுடன் கோலி: படம் உதவி | ட்விட்டர்.

அகமதாபாத்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் ரேஸில் இருந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது.

வரும் ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூஸிலாந்து அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. நியூஸிலாந்துடன் விளையாடப்போகும் அணி யாரென்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது.

ஆனால், அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வி அடைந்ததையடுத்து, ஃபைனலுக்குச் செல்லும் போட்டியிலிருந்து வெளியேறியது. ஆனால், ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளதே தவிர வாய்ப்பு உறுதியாகவில்லை.

இந்திய அணி சற்று இடறினாலும், அந்த வாய்ப்பில் ஃபைனல் வாய்ப்பைப் பிடிக்க ஆஸ்திரேலிய அணி காத்திருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குச் செல்வது என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தின் அடிப்படையில்தான் இருக்க முடியும் அல்லது இந்தியாவின் துரதிர்ஷ்டம் அந்த அணிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் இந்திய அணி 490 புள்ளிகளுடன் 71.0 சதவீதத்துடன் முதலிடத்தில் புள்ளிப் பட்டியலில் இருக்கிறது. ஆனால், நியூஸிலாந்து 70 சதவீதத்துடன் 420 புள்ளிகளுடன் இருந்தாலும் ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இப்போதுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. அடுத்துவரும் டெஸ்ட்டை இந்திய அணி குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் அல்லது வென்று 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணி ஃபைனலுக்குள் செல்ல முடியும்.

ஒருவேளை 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்து, இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியை வென்று 2-2 என்று சமன் செய்தால், இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு பறிபோகும். ஆஸ்திரேலிய அணிக்கு ஃபைனல் வாய்ப்பு கிடைத்துவிடும்.

ஆனால், 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்வதற்கு முயல்வதைவிட, அந்தப் போட்டியில் வெல்வதே எந்தவிதமான சிரமமும் இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல உதவும். ஏனென்றால், கடைசி நேரத்தில் ரன் ரேட்டில் சிக்கல், புள்ளிக்கணக்கில் முன்னிலை என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு சென்றுவிடக்கூடும்.

ஆதலால், இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவதைத் தடுக்க இங்கிலாந்து அணி முயலும் பட்சத்தில் இது ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எப்படியாகினும் இந்திய அணியின் தோல்வி, ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்புக் கதவைத் திறந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x