Last Updated : 25 Feb, 2021 01:55 PM

 

Published : 25 Feb 2021 01:55 PM
Last Updated : 25 Feb 2021 01:55 PM

இந்திய வீரர்கள் அப்பீல் செய்தால் 4 வீடியோ கோணம்; எங்களுக்கு ஒரு கோணமா?- நடுவரின் முடிவு குறித்து இங்கிலாந்து வீரர் கிராலே அதிருப்தி

இந்திய வீரர்கள் அப்பீல் செய்தால், 4 வீடியோ கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் அப்பீல் செய்தால் நடுவர்கள் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கிறார்கள். நடுவரின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளன என்று இங்கிலாந்து வீரர் கிராலே தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா லீச் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இது தொடர்பாக 3-வது நடுவருக்கு இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்தபோது, அது அவுட் இல்லை என டிவி நடுவர் ஷம்சுதீன் தெரிவித்தார். அதேபோல ஷுப்மான் கில்லுக்கும் அவுட் வழங்கப்பட்டதையும் மூன்றாவது நடுவர் அப்பீலில் மறுத்துவிட்டார்.



டிவி நடுவரின் முடிவுகள் குறித்து இங்கிலாந்து வீரர் கிராலே வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிராலே அளித்த பேட்டியில் கூறியதாவது:

''டிவி நடுவரின் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கின்றன. நாங்கள் இப்போது போட்டியிலிருந்து பின்தங்கிவிட்டோம். அவுட் குறித்த தீர்மானிக்கும் கடினமான நேரமும் எங்களுக்குச் சாதகமாக இல்லை. எங்களுக்கு இருந்த வாய்ப்புகளும் எங்களுக்கு உதவவில்லை.

நாங்கள் பேட் செய்தபோது, எங்களை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய வீரர்கள் அப்பீல் செய்தால் நடுவர்கள் 4 முதல் 6 கேமரா கோணத்தில் பார்த்து முடிவு அறிவிக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஃபீல்டிங் செய்யும்போது, இந்திய அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்போது அப்பீல் செய்தால், நடுவர்கள், ஒரு கேமரா கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்திய வீரர்கள் அவுட்டா அல்லது இல்லையா என்பதை முழுமையாக ஆய்வு செய்யப்படுவதில்லை எனும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தை நான் கேப்டன் ரூட், மூத்த வீரர்களிடம் விட்டுவிட்டேன்.

நான் இளம் வீரர் என்பதால், இந்தச் சூழலில் நான் தலையிடாமல் இருப்பதே நன்று என நினைக்கிறேன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட் செய்வது கடினமாக இருந்தது. இன்னும் நாங்கள் கூடுதலாக ரன்கள் அடித்திருக்க வேண்டும். 200 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் இந்திய அணிக்குச் சவாலாக இருந்திருக்கும்''.

இவ்வாறு கிராலே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x