Published : 23 Feb 2021 11:50 AM
Last Updated : 23 Feb 2021 11:50 AM

இந்திய ஒருநாள், டி20 அணியில் அஸ்வினைச் சேர்க்காதது துரதிர்ஷ்டமானது: கவுதம் கம்பீர் வேதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினைச் சேர்க்காதது துரதிர்ஷ்டமானது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் அற்புதமான ஃபார்மில் இருந்தார். ஆஸி. தொடரில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

இங்கிலாந்துக்கு எதிராகச் சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினின் பங்களிப்பு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் சதம் அடித்து அசத்தினார்.

டெஸ்ட் தொடருக்கான வீரர் அஸ்வின் என முத்திரை குத்தப்பட்டு அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்கிறது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடினார். ஜூலை 9-ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியதுதான் அஸ்வின் கடைசியாகப் பங்கேற்றதாக இருந்தது.

அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுவரும் அஸ்வின் தனது பங்களிப்பை முழுமையாக அளித்து ஒருநாள், டி20 போட்டிக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் அஸ்வின் அணிக்குள் தேர்வு செய்யப்படுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் அஸ்வின் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ''இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் அஸ்வினை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் ஒதுக்கியது துரதிர்ஷ்டமானது. டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை நெருங்கிய வீரர், 5 டெஸ்ட் சதங்களை அடித்தவர். ஆனால், அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. அஸ்வினின் செயல்பாடு அருமையாக இருந்து வருகிறது.

பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்தக்கூடிய, திறமையான பந்துவீச்சாளர். ஏராளமான போட்டிகளில் விளையாடியவர். ஒவ்வொரு போட்டியிலும் தனக்கென முத்திரையைப் பதிக்கக்கூடிய அஸ்வினைப் புறக்கணித்திருக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறுகையில், "உள்நாட்டில் விளையாடும்போது, அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது முதல் முறை அல்ல. அஸ்வின் எவ்வாறு வேறுபட்டவர் எனப் பேசும்போது, அதிலும் உள்நாட்டில் விளையாடும்போது, அவர் அதிகமான அனுபவம் உடையவர். 2-வது, உள்நாட்டில் விளையாடும்போது, ஆடுகளம் நன்றாக ஒத்துழைக்கும் என்றால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்.

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மாணவராக அஸ்வின் இருப்பதால், எப்போதும் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்குச் சில உடல் தகுதி பிரச்சினைகள் உள்ளன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்டபோது, உடற்தகுதியைப் பராமரிப்பதில் அஸ்வின் கடுமையாக உழைக்கிறார், நீண்ட நேரம் பந்துவீசக் கூடியவராக இருக்கிறார். அதிலும் ரசித்துப் பந்து வீசுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x