Published : 23 Feb 2021 11:00 AM
Last Updated : 23 Feb 2021 11:00 AM

புதிய அவதாரமெடுக்கும் தினேஷ் கார்த்திக்: இந்தியா-இங்கி. தொடரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள், டி20 தொடரின்போது புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தினேஷ் கார்த்திக்கும் சமகாலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்கள். ஆனால், தோனி ஜொலித்த அளவுக்கு தினேஷ் கார்த்திக்கால் பிரகாசிக்க முடியவில்லை. இந்திய அணியில் நீண்ட காலத்துக்கு விக்கெட் கீப்பர் இடத்தை தோனி ஆக்கிமிரத்துவிட்டார். இதனால் சில தொடர்களுக்கு மட்டுமே தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது

அந்த வகையில் தினேஷ் கார்த்திக் இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் 1,752 ரன்களும், 32 டி20 போட்டிகளில் 399 ரன்களும் சேர்த்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

தோனி ஓய்வுக்குப் பின் இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சாம்ஸன், இஷான் கிஷன் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர். இதனால் இந்திய அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதால், புதிய அவதாரத்தை எடுக்க தினேஷ் கார்த்திக் முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா இடையே நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரின்போது, தினேஷ் கார்த்திக் முதல் முறையாக வர்ணனையாளர் அவதாரத்தை எடுக்க உள்ளார். இதற்குமுன், அவ்வப்போது பேட்டிகளில் மட்டுமே வந்து சென்ற தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவே வர உள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து தொடரை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கையும் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலின் வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் மட்டுமே இந்திய வீரர். மற்றவர்களான டேவிட் லாய்ட், நாசர் ஹூசைன், இயான் வார்ட், இபோனி ரெயின்போர்ட் பிரன்ட், மைக்கேல் ஆத்தர்டன், ராப் கீ, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர்.

ஏற்கெனவே வர்ணனையாளர்களாக ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், பர்தீப் படேல், ராபின் உத்தப்பா இருந்து வரும் நிலையில், அவர்களுடன் தினேஷ் கார்த்திக்கும் இணைய உள்ளார்.

தற்போது தமிழக அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்று விஜய் ஹசாரே கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். தமிழக அணிக்காக எடுத்துக்கொண்ட கடமைகளை முடித்துவிட்டுத்தான் வர்ணனையாளர் பொறுப்புக்கு வருவேன், எந்தவிதத்திலும் தமிழக அணிக்கான கடமையிலிருந்து விலகமாட்டேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x