Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
ஜார்கண்டில் உள்ள ராஞ்சி நகரில் கடந்த வாரம் நடந்த பெண்களுக்கான தேசிய நடை பந்தயத்தில் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 45 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் பிரியங்கா கோஸ்வாமி. இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா கோஸ்வாமி. மீராவைப் பொறுத்தவரை, அவர் நடை பந்தய வீராங்கனையாக மாறியதே ஒரு விபத்துதான். 6-ம் வகுப்பு படிக்கும்வரை ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகத்தான் அவர் இருந்துள்ளார். இதற்காக பள்ளி அளவில் பல பரிசுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த சமயத்தில் உள்ளூரில் ஒரு நடை போட்டி நடந்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கத்துடன் புத்தகங்களை எடுத்துச் செல்லும் அழகான பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் பிரியங்காவுக்கு ஒரு பை தேவைப்பட்டதால், இப்போட்டியில் பங்கேற்றுள்ளார். ஏற்கெனவே ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருந்தது, இந்த பந்தயத்தில் பிரியங்காவுக்கு உதவியாக இருந்துள்ளது. இப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் பிரியங்கா. அன்றுமுதல் நடை பந்தயம் அவருக்கு மிகவும் பிடித்துப் போக கவுரவ் தியாகி என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார்.
“நடை பந்தயத்தைப் பொறுத்தவரை நாம் நடக்கும்போது கால் முட்டி மடங்கக் கூடாது. அதேபோல் எப்போதும் ஏதாவது ஒரு பாதம் தரையில் பதிந்திருக்க வேண்டும். இதற்காக என் பயிற்சியாளரிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்” என்கிறார் பிரியங்கா. ஒலிம்பிக் போட்டியை லட்சியமாகக் கொண்டு, பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் கடந்த 18 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார் பிரியங்கா. இதற்காக வாரந்தோறும் அவர் 250 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT