Published : 22 Feb 2021 01:22 PM
Last Updated : 22 Feb 2021 01:22 PM

உள்ளூர் வீரர்களைச் சேருங்கள்; இல்லாவிட்டால் ஹைதராபாத் பெயரை மாற்றுங்கள்: சன்ரைசர்ஸ் அணிக்கு டிஆர்எஸ் எம்எல்ஏ மிரட்டல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வாய்ப்பு வழங்காவிட்டால் ஹைதராபாத் என்ற துணைப் பெயரை எடுத்துவிடலாம் என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ தனம் நாகேந்தர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ தனம் நாகேந்தர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஹைதராபாத் நகரைச் சேர்ந்த எந்த ஒரு வீரரையும் சன்ரைசர்ஸ் அணி சேர்க்கவில்லை. உள்ளூரைச் சேர்ந்த எந்த வீரரையும் சேர்க்காமல் சன்ரைசர்ஸ் அணி விளையாடினால், ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு இடையூறு செய்வோம்.

ஒவ்வொரு அணியிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த நகரைச் சேர்ந்த பல திறமைவாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார்கள். தேர்வு முறையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அந்தப் பதவிக்கே தகுதியில்லாதவர். பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தண்டனை பெற்றவர்.

டிஆர்எஸ் எம்எல்ஏ தனம் நாகேந்தர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். சிராஜ்ஜைப் போன்ற திறமைவாய்ந்த பல வீரர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சரியான தளம் கிடைக்கவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் அணி அதுபோன்ற வீரர்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் ஹைதராபாத் எனும் பெயரை நீக்கிவிடட்டும்" எனத் தெரிவித்தார்

கடந்த 18-ம் தேதி நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த எந்த வீரரும் ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அசாருதீன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "ஹைதராபாத்தில் இருந்து ஒரு வீரர் கூட ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுக்காதது வேதனையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அசாருதீனின் இந்த ட்விட்டர் கருத்தையடுத்து, டிஆர்எஸ் எம்எல்ஏவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x