Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM
கிரிக்கெட் உலகில் அதிரடி மன்னனாக விளங்கிய சனத் ஜெயசூர்யா, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று. 1991-ம் ஆண்டு இதே நாளில்தான் (பிப்ரவரி 22) நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெயசூர்யா அறிமுகமானார்.
1969-ம் ஆண்டு இலங்கையின் கடற்கரை நகரமான மடாராவில் பிறந்தார் ஜெயசூர்யா. சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட அவர், பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, பல பரிசுகளை வென்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல்முறையாக 1988-ம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணிக்காக ஆடிய ஜெயசூர்யா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் 1989-ம் ஆண்டு முதல் ஆடினாலும், டெஸ்ட் போட்டியில் ஆட 1991-ம் ஆண்டுவரை அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.
1996-ம் ஆண்டில் இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெயசூர்யா, இத்தொடரில் 221 ரன்களை குவித்ததுடன், 6 விக்கெட்களையும் கைப்பற்றினார். 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயசூர்யா, 6,973 ரன்களை குவித்ததுடன், 98 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று 445 ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்களை குவித்ததுடன், 323 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். 2007-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2011-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற ஜெயசூர்யா, பின்னர் அரசியலில் நுழைந்தார். மகிந்தா ராஜபக்சவின் கட்சியில் இணைந்தவர், பின்னர் இலங்கை அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT