Published : 11 Nov 2015 04:14 PM
Last Updated : 11 Nov 2015 04:14 PM
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார்.
இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார்.
இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
“டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எடுக்க முடிந்த அளவில் நான் அதிர்ஷ்டம் உடையவனே. நான் பாகிஸ்தானுக்காக எப்போதும் உணர்வுடன் ஆடியுள்ளேன். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று எனக்கு தோன்றியது. அதனால் இந்த முதல் போட்டியே எனது கடைசி ஒருநாள் போட்டி என்ற முடிவை எடுத்தேன்” என்றார் யூனிஸ் கான்.
37 வயதான யூனிஸ் கான் தனது 265-வது ஒருநாள் போட்டியில் இன்று இங்கிலாந்துக்கு எதிராக ஆடுகிறார். கராச்சியில் 2000-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அவர் தன் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
264 ஒருநாள் போட்டிகளில் யூனிஸ் கான் 7,240 ரன்களை 7 சதங்கள், 48 அரைசதங்களுடன் 31.34 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த டிசம்பரில் நியூஸிலாந்துக்கு எதிராக சதம் எடுத்தார் யூனிஸ் கான். இவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் 144 ரன்கள்.
ஏற்கெனவே அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்களில் முதலிடம் பிடித்துள்ள யூனிஸ் கானின் டெஸ்ட் சராசரி 53.94 என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT