Published : 20 Jun 2014 10:44 AM
Last Updated : 20 Jun 2014 10:44 AM

சுவாரேஸ் இரட்டை கோல்கள்: இங்கிலாந்தை உருக்குலைத்தது உருகுவே!

உலகின் மிக ஆக்ரோஷமான கால்பந்து ரசிகர்களைக் கொண்ட இங்கிலாந்து, உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உருகுவேயின் சுவாரேஸ் 2 கோல்களை அடிக்க, இங்கிலாந்து ஒரு கோலை மட்டுமே அடித்து 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

முதல் முறையாக இங்கிலாந்து முதல் 2 போட்டிகளிலும் தோல்வி தழுவியுள்ளது.

முதலில் உருகுவேயின் சுவாரேஸ் அடித்து முன்னிலை பெறச் செய்த கோலுக்கு பதிலடியாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

ஆனால், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் 85வது நிமிடத்தில் சுவாரேஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார்.

இங்கிலாந்து 2 தோல்விகளினால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெரும்பாலும் குறைந்து விட்டது என்றே கூறவேண்டும். கோஸ்டாரிகாவை நல்ல கோல் வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டு மற்ற முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும்.

அன்று கோஸ்டா ரிகாவுக்கு எதிராக உருகுவே தோற்றபோது சுவாரேஸ் காயம் காரணமாக ஆடவில்லை. நேற்று இங்கிலாந்தின் தலைவிதியை தீர்மானிக்கவென்றே அவர் காயத்திலிருந்து குணமடைந்தது போல் ஆகிவிட்டது.

மேலும் இங்கிலாந்து கவுண்டி அணியான லிவர்பூல் அணிக்கு 3 ஆண்டுகள் விளையாடியவர் சுவரேஸ், இதனால் இந்த இங்கிலாந்து வீரர்களை அவருக்கு அணு அணுவாகத் தெரியும்.

துவக்கம் முதலே சோம்பேறித்தனமான இங்கிலாந்து ஆட்டத்திற்கு சுவாரேஸ் தலைவலியாக இருந்தார். தொடக்க நிமிடங்களில் சுவாரேஸ் இங்கிலாந்து வீரர்களைக் கடந்து எடுத்துச் சென்று பந்தை ஒரு ஷாட் அடிக்க கோல் அருகில் நிறிருந்த காகில் தலையில் பட்டு கோல் நோக்கிச் செல்ல இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹார்ட் தடுத்தார்.

இங்கிலாந்து தனது பாஸ், ஷாட் என்று அனைத்திலும் திணறிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் நடு மைதானத்தில் உருகுவே வீரர் டீகோ காடின் பந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பிறகு பந்தை அவர் இடது புறம் காத்திருந்த எடின்சன் கவானியிடம் பாஸ் செய்தார்.

அவர் சுவாரேசை நோக்கி பந்தை தூக்கி அடிக்க இங்கிலாந்து வீரர் பில் ஜேகியெல்காவை சுலபமாக ஏமாற்றி தலையால் கோலுக்குள் அடித்தார் சுஆரேஸ். உருகுவே முன்னிலை பெற்றது.

அதன் பிறகு உருகுவே, இங்கிலாந்து இரண்டு அணிகளுமே சில வாய்ப்புகளை கோட்டைவிட்டது. இங்கிலாந்து தன் வாய்ப்பிற்காக 75வது நிமிடம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

இடைவேளைக்குப் பிறகு உருகுவேயிற்கு 2 அருமையான வாய்ப்புகள் வந்தது. கார்னர் ஷாட் ஒன்று கோலுக்குள் செல்லுமாறு சுவாரேஸினால் அடிக்கப்பட அதனை ஒருவழியாக இங்கிலாந்து கோல் கீப்பர் ஹார்ட் கோல் விழாமல் காப்பாற்றினார். ஆனால் மீண்டும் உருகுவே வீரர் கவானி இடதுபுறத்திலிருந்து வந்து பந்தை கோலை நோக்கி அடித்தார் ஆனால் ஷாட் வெளியே சென்றது.

73வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டரிட்ஜ் 20 அடியிலிருந்து உருகுவே கோலை நோக்கி ஒரு ஷாட் அடித்தார். ஆனால் அதை எளிதில் பிடித்தார் கீப்பர். 75வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கிளென் ஜான்சனிடம் பந்து வர அவருக்கு இடைவெளிகள் நிறைய இருந்தது அவர் பந்தை தான் இருந்த வலது புறத்திலிருந்து மேலும் உள்பக்கமாக கொண்டு சென்றார். அங்கிருந்து அவர் உருகுவே கோல் எல்லைக்குள் பந்தை உடகிக்க வெய்ன் ரூனி உள்ளே புகுந்து கோலாக மாற்றினார். இங்கிலாந்து ரசிகர்கள் முதல் முறையாக எழுச்சியுற்றனர். காரணம் அவர்கள் ஹீரோ வெய்ன் ரூனி உலகக் கோப்பையில் அடிக்கும் முதல் கோல் அது. இங்கிலாந்து சமன் செய்தது.

அதன் பிறகு ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இங்கிலாந்தின் ஷாட்களில் சக்தி இல்லை. ஸ்டரிட்ஜ் அடித்த ஷாட் ஒன்றை எளிதில் பித்தார் உருகுவே கீப்பர்.

85வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட் செய்த தவறினால் உருகுவே வாய்ப்பு பெற்றது.ஜெரார்ட் ஒரு பந்தை தலையால் முட்ட அது நேராக சுவரேஸிடம் வன்டக்து. இவையெல்லாம் இங்கிலாந்து கோல் அருகில் நடக்கிறது. அந்த இடத்தில் அன்டக் நேரத்தில் ஜெரார்ட் அத்தகைய தவறை செய்திருக்க கூடாது.

சுவாரேஸ் பந்தை நேராக கோலை நோக்கி அடிக்க இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹார்ட்டினால் தடுக்க முடியவில்லை உருகுவேயின் வெற்றி கோலாக இது மாறியது. சுவாரேஸ் மைதானத்தில் விழுந்து மகிழ்ச்சியில் தேம்பினார். அவரை உருகுவே வீரர்கள் மொய்த்தனர்.

ஆனால் கடைசியில் தோலியுற்ற இங்கிலாந்தின் ஜெரார்டின் முதுகைத் தட்டி சுவாரேஸ் ஆறுதல் சொன்னது இரு அணிகளுக்கும் இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் செய்கையாக அமைந்தது.

ஒரு விதத்தில் 2 கோல்களுக்கும் இங்கிலாந்து வீரர் ஜெரார்டின் தவறே காரணமாக இருந்தது. இருமுறையும் சுவாரேஸ் கோலாக மாற்றினார். ஆகவே ஜெரார்டை அவர் தேற்றியது ஒரு நெகிழ்ச்சியான செய்கைதான்.

இத்தாலி அணி கோஸ்டா ரிகாவை வீழ்த்த வேண்டும், பிறகு இங்கிலாந்து கோஸ்டாரிகாவை வீழ்த்த வேண்டும். உருகுவே, இத்தாலியிடம் தோற்க வேண்டும். இவ்வளவும் நடந்தால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.

ஆகவே கணக்கின்படி இங்கிலாந்துக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் உணர்வின்படி, திறனின் படி அந்த அணி வெளியேறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x