Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
கூடைப்பந்து விளையாட்டில் ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்த மைக்கேல் ஜோர்டனின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 17).
விளையாட்டு வீரர்களிலேயே அதிகம் சம்பாதித்தவர் (இவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று பெயர்பெற்றவர் மைக்கேல் ஜோர்டன். 1963-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார். வங்கி ஊழியரான அவரது அப்பாவுக்கு 1968-ம் ஆண்டில் வடக்கு கரோலினாவுக்கு இடமாற்றம் கிடைக்க, அங்கு குடியேறினார். கூடைப்பந்து வீரரான மேஜிக் ஜான்சனின் ஆட்டங்களால் கவரப்பட்ட மைக்கேல் ஜோர்டன், அவரைப்போன்று தானும் ஒரு சிறந்த கூடைப்பந்து வீரராக விரும்பினார். ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். கூடைப்பந்து விளையாட்டில் மட்டுமின்றி பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளிலும் அவர் வல்லவராக இருந்தார்.
பின்னாளில் பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றதால் சிறு வயதிலேயே உள்ளூரில் பிரபலமானார். சிறந்த கூடைப்பந்து வீரராக இருந்ததால் விளையாட்டு கோட்டாவில் அவருக்கு வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அங்கு படிப்போடு சேர்த்து, அவரது கூடைப்பந்து ஆடும் திறனும் மெருகூட்டப்பட்டது. 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க அணியில் மைக்கேல் ஜோர்டன் இடம்பெற்றிருந்தார். அந்த அணி, தங்கப் பதக்கம் வெல்ல, மைக்கேல் ஜோர்டனின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
கல்லூரிப் படிப்பை முடிக்கும்முன்பே 1984-ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்பிஏ கூடைப்பந்து தொடரில் சிகாகோ புள்ஸ் அணிக்காக ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கிளப்புக்காக 7 ஆண்டுகள் ஆடிய மைக்கேல் ஜோர்டன், ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 28.2 புள்ளிகளை ஈட்டினார். என்பிஏ கூடைப்பந்து போட்டிகளின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் மைக்கேல் ஜோர்டன் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். புகழ்பெற்ற மேற்கத்திய விளையாட்டு பத்திரிகையான ’ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேடட் மேகசின்’, 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை 1996-ல் இவருக்கு வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT