Last Updated : 15 Feb, 2021 11:04 AM

 

Published : 15 Feb 2021 11:04 AM
Last Updated : 15 Feb 2021 11:04 AM

இந்தியா தோற்கும் நிலையில் இருந்தபோது பிட்ச் பற்றி பேசினீர்களா? மைக்கேல் வானுக்கு ஷேன் வார்ன் பதிலடி

ஷேன் வார்ன், மைக்கேல் வான் : கோப்புப்படம்

சென்னை

முதல் டெஸ்ட் போட்டியில் நீங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது, இந்தியா தோற்கும் நிலையில் இருந்தபோது, ஆடுகளம் குறித்து யாரும் பேசவில்லையே என்று மைக்கேல் வானுக்கு ஷேன் வார்ன் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

சென்னையில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து ட்வீட் செய்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், “சேப்பாக்கத்தில் இருப்பது பிட்ச் அல்ல பீச். இதில் இங்கிலாந்து அணி டாஸில் தோற்று போட்டியில் வென்றால் அது மறக்கமுடியாத வெற்றியாக அமையும்” என ஆடுகளத்தை விமர்சித்திருந்தார்.

மைக்கேல் வான் மற்றொரு ட்வீட்டில், “கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுமே பொழுதுபோக்கானவைதான். ஆனால், நேர்மையாகச் சொல்கிறேன். இந்த சேப்பாக்கம் ஆடுகளம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியா சிறப்பாகச் செயல்பட்டால் எந்தவிதமான காரணமும் கேட்காதீர்கள். 5 நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமே அல்ல” எனத் தெரிவித்தார்.

மைக்கேல் வானின் கருத்துக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் பதிலடி கொடுத்துள்ளார். வார்ன் பதிவிட்ட கருத்தில், “ஹலோ மைக்கேல் வான்… முதல் டெஸ்ட்டின் சில நாட்கள் விக்கெட் விழாமல் உங்கள் அணி வீரர்கள் பேட் செய்தபோது ஆடுகளத்தைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் வெற்றி பெறும் தறுவாயில், இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தபோது ஆடுகளத்தைப் பற்றி நீங்கள் பேசவில்லை. இப்போது ஆடுகளம் பற்றிப் பேசுகிறீர்கள்.

ஆனால், 2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஆடுகளம் இரு அணிகளுக்குமே முதல் நாளில் இருந்து ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இங்கிலாந்து அணிதான் மோசமாகப் பந்து வீசுகிறது. ரோஹித் 161 ரன்கள் அடித்தார். ரஹானேவும், ரிஷப் பந்த்தும் சிறப்பாக விளையாடினர்.

பந்து சுழல்வதிலும், ஸ்விங் ஆவதிலும் எந்த வேறுபாடும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோம். இந்தியா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இங்கிலாந்தைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறது. இரு அணிகளுக்குமே சூழல் முதல் நாளில் இருந்து ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x