Published : 14 Feb 2021 03:28 PM
Last Updated : 14 Feb 2021 03:28 PM

134 ரன்களில் ஆல் அவுட்; போராடி ஃபாலோ ஆனைத் தவிர்த்த இங்கிலாந்து: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் அபாரம்

படம் உதவி: பிசிசிஐ.

சென்னை

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இங்கிலாந்துக்கு மோசமாக அமைந்துள்ளது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது இங்கிலாந்து. ஃபாலோ ஆனைத் தவிர்க்க கடும் போராட்டம் நடத்தி 4 ரன்களில் தப்பியது. இந்திய அணியினரின் சிறப்பான பந்துவீச்சும், ஃபீல்டிங்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சுழல் பந்துக்குத் தோதான மைதானம் என்பதால் கூடுதலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். அதன் பலனை இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் காணமுடிந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி வலுவான அடித்தளத்துடன் 329 ரன்களில் ஆல் அவுட் ஆக, அடுத்து இன்று காலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு இன்று காலை முதலே பேரிடியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வீழ்ச்சியைச் சந்தித்தது. இது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

காலையில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததும் தனது அதிரடி மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளினார் ரிஷப் பந்த். அவருடன் யாரும் இணையாக நிற்காததால் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிய ரிஷப் பந்த் மட்டும் நாட் அவுட்டாக 58 ரன்களைச் சேகரித்திருந்தார். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை உற்சாகத்துடன் தொடங்கிய இங்கிலாந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. முதல் ஓவரிலேயே விக்கெட் விழ நிதானமாக ஆட வேண்டும் என எண்ணிய இங்கிலாந்து, 7 ஓவர்கள் கடந்த நிலையில் 16 ரன்கள் இருந்தபோது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் சிப்லி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரூட் கலக்குவார், நிதானமாக நின்று ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் 136 ரன்களை ஸ்ட்ரைக் ரேட்டாக வைத்துள்ள அவர், முதல் இன்னிங்ஸில் இந்தியாவைக் கலங்கடித்தவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அக்சர் படேல் வீசிய பந்தில் தனது வழக்கமான வெற்றிகரமான ஸ்வீப் ஷாட்டை ஆடும்போது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரது விக்கெட்டை அக்சர் படேல் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட் கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், டான் லாரன்ஸுடன் இணைந்து ஆடினார். ஆனாலும், இந்திய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டான் லாரன்ஸ் அஸ்வின் வீசிய பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 9 மட்டுமே.

இங்கிலாந்து அணி மொத்தம் 39 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

அதன்பின் ஆடவந்த இங்கிலாந்து வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த போப் மட்டுமே ஒரு பக்கம் நிலைத்து ஆட ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டாகி அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 18 மட்டுமே. அடுத்து களம் இறங்கிய ஃபோக்ஸ் நிலைத்து ஆடினார். சிராஜுக்கு முதல் ஓவரைக் கொடுக்க முதல் ஓவர் முதல் பந்திலேயே போப், ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து மொயின் அலி அக்சர் பந்தில் முதல் ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோன் 5 பந்துகள் மட்டுமே ஆடிய நிலையில், 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லீச், ஃபோக்ஸுடன் இணைந்து நிதானமாக ஆடினார். ஆனாலும் பலன் அளிக்கவில்லை. 5 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் (அற்புதமான டைவ் கேட்ச்) கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதம் உள்ளது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டும் எனப் போராடிய இங்கிலாந்து அணி 134 ரன்களைக் கடந்ததால் ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது. அடுத்து வந்த ஸ்டூவர்ட் ப்ராட் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இதன்மூலம் அவர் 29-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார்.

இந்த இன்னிங்ஸில் ரிஷப் பந்த் இரண்டு கேட்ச்சுகளை அற்புதமாக டைவ் அடித்துப் பிடித்தார். 9-வது விக்கெட்டை அவர் பாய்ந்து நூலிழையில் தவறவிடும் வாய்ப்பிருந்தும் கேட்ச்சைப் பிடித்தது சிறப்பான கேட்ச்சாக அமைந்தது. ஃபோக்ஸ் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அதிகபட்ச ரன் எடுத்ததும் அவர்தான்.

மொத்தம் 59.5 ஓவர்களே ஆடிய இங்கிலாந்து அணியில் இரட்டை இலக்க எண்களை அடித்த பேட்ஸ்மேன்கள் 4 பேர் மட்டுமே. மற்ற அனைவரும் கேப்டன் ரூட் உட்பட ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்துள்ளனர். இந்திய அணியில் அஸ்வின் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 23.5 ஓவர்களை வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து (1.8/ ஓவர்) 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அறிமுக வீரர் அக்சர் படேல் 20 ஓவர்கள் வீசி 40 ரன்கள் (2 / ஓவர்) கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இஷாந்த் சர்மா 5 ஓவர்கள் வீசி 22 ரன்களைக் கொடுத்து (4.4/ஓவர்) 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ்16 ஓவர்கள் வீசி விக்கெட் இல்லை. சிராஜ் 5 ஓவர்கள் வீசி 5 ரன்கள் (1/ஓவர்) மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

இதனிடையே இந்தியா தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, கில் ஆடத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்தியா 195 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x