Published : 14 Feb 2021 12:01 PM
Last Updated : 14 Feb 2021 12:01 PM

இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவெனச் சரிவு: 39 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன

படம் உதவி க்ரிக் இன்ஃபோ

சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 329 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்து வருகின்றன. மதிய உணவு இடைவேளைக்குள் இங்கிலாந்து 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் அமைக்கப்பட்டாலும், 3-வது நாளில் இருந்துதான் சுழற்பந்துவீச்சுக்குக் கை கொடுத்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்குக் கை கொடுக்கும் வகையில் ஆடுகளத்தை அமைத்துள்ளார்கள். மைதானத்தில் அதிகமான பிளவுகள் காணப்படுவதால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஸ்டோன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஷுப்மான் கில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆடினார்.

புஜாரா நிதானமாக ஆட மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். புஜாரா நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 5 பந்துகளைச் சந்தித்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து தடுமாறிய நிலையில் ரோஹித் சர்மா, ரஹானே ஜோடி நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை 248க்கு உயர்த்தியது. அப்போது ரோஹித் சர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் எடுத்த ரன்கள் 161. ரோஹித் சர்மா அவுட்டாகிச் சென்ற 3 ஓவர்கள் கழித்து ரஹானே போல்டாகி ஆட்டமிழந்தார். ரஹானே 67 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்னர், ரஹானே அவுட் ஆனவுடன் ரிஷப் பந்த்துடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஆனால் அஸ்வின், ரூட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் அவுட்டாகி வெளியேற அக்சர் படேல் அவருடன் இணைந்தார். 300 ரன்கள் 6 விக்கெட் இழப்பு என்கிற நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

இன்று காலை அக்சர் படேல், ரிஷப் பந்த் ஜோடி களத்தில் இறங்க அக்சர் படேல், மொயின் அலி பந்தில் ஸ்டெம்பிங் முறையில் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அடுத்து வந்த இஷாந்த் சர்மா அதே ஓவரில் ஸ்வீப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. அதன் பின்னர் குல்தீப் யாதவ் ரிஷப் பந்த்துடன் ஜோடி சேர இனி மெதுவாக ஆடினால் பயனில்லை என ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஓரளவு ரிஷப் பந்த்துடன் நிலைத்து நின்ற குல்தீப் யாதவ், அணியின் ஸ்கோர் 325 ரன்கள் இருந்தபோது ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சிராஜ் 4 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 329க்கு உயர்த்த, அவரும் அதே ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ரிஷப் பந்த் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கைத் தொடங்க முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீச முதல் ஓவரிலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து நிதானமாக ஆட எண்ணிய இங்கிலாந்து, 7 ஓவர்கள் கடந்த நிலையில் 16 ரன்கள் இருந்தபோது அஸ்வின் வீசிய பந்தில் சிப்லி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரூட் முதல் இன்னிங்கிஸில் இந்தியாவைக் கலங்கடித்தவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அக்சர் படேல் வீசிய பந்தில் தனது வழக்கமான வெற்றிகரமான ஸ்வீப் ஷாட்டை ஆடும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 6 மட்டுமே. அவரது விக்கெட்டை அக்சர் படேல் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட் கணக்கைத் தொடங்கினார்.

அதன் பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், டான் லாரன்ஸுடன் இணைந்து ஆடினார். ஆனாலும் இந்திய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டான் லாரன்ஸ் அஸ்வின் வீசிய பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. இங்கிலாந்து அணி மொத்தம் 39 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 4/39 ஆகும்.

அஸ்வின் 2 விக்கெட், இஷாந்த் சர்மா 1 விக்கெட், அக்சர் படேல் 1 விக்கெட் எடுத்துள்ள நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மைதானத்தில் 50% ரசிகர்களை அனுமதித்ததன் முலம் ரசிகர்களுக்கு இந்த மேட்ச் நல்ல விருந்தாக அமைந்துள்ளது எனலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x