Last Updated : 12 Feb, 2021 08:14 PM

 

Published : 12 Feb 2021 08:14 PM
Last Updated : 12 Feb 2021 08:14 PM

நாளை 2-வது டெஸ்ட்: பிட்ச்சை மாற்றியாச்சு, ஹர்திக், அக்ஸர் வருகிறார்கள்; தேறுமா இந்தியா? வரலாறு திரும்பிவிடக்கூடாது?

சென்னையில் நடந்த முதல்டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் ஆடுகளத்தில் பந்து பந்து தூசியை கிளப்பி சுழன்றகாட்சி : படம் உதவி ட்விட்டர்

சென்னை


உலக ெடஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன், சென்னையில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இருந்த ஆடுகளம் 3-வது நாளில் இருந்துதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு(குழியாகமாறியது) ஒத்துழைத்தது. ஆனால், நாளை 2-வது டெஸ்ட் போட்டிக்கு முதல்நாளில் இருந்தே ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தை மாற்றியுள்ளார்கள்.

சென்னையில் நடக்கும் சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு தரமான ஆடுகளத்தை அமைக்க வேண்டும், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களின் திறமையை பரிசோதிக்கும் களமாக இருக்கும் வகையில் உருவாக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் குழி பிட்ச்சாகவே தொடர்ந்து அமைப்பதை என்னவென்று சொல்வது. ஐபிஎல் தொடரிலிருந்து குழி பிட்ச் கதை தொடர்ந்து வருகிறது.

ஆடுகளத்தில் எந்தவிதமான உயிரும் இல்லாததால்தான் கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இரு நாட்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த ஒவ்வொருவருக்கும் நாக்கு தள்ளியது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்று உண்மையான பிட்ச்சை வடிவமைத்து இருந்தால், நிச்சயம் இரு அணியினருக்கும் சவாலாக இருந்திருக்கும்.

முதல்நாளே சுழற்பந்துவீ்ச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தை அமைத்தால் அடுத்த 5 நாட்கள் பேட்ஸ்மேன்கள் நிலையை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. ரிஷப்பந்த் வந்து பந்துவீசினால்கூட பந்து தாராளமாக சுழலும் நிலைக்கு ஆடுகளம் அடுத்தடுத்த நாட்களி்ல் மாறிவிடும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரராக நீண்டகாலத்துக்குப்பின் வாய்ப்புப் பெற்ற ரோஹித் சர்மா ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. நாளைய போட்டியில் நிலைத்து ஆடுவதற்கு முயல வேண்டும்.

துணைக் கேப்டன் ரஹானே கடந்த போட்டியில் மோசமாக ஆட்டமிழந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதைக் கடந்து ரஹானே இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி பதில்அளித்தால்தான் நடுவரிசை பலப்படும்.

இந்திய அணியில் நாளைய ஆட்டத்தில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நதீம், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா மூவரில் இருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

விரல்களில் சுழற்பந்துவீசுவதைவிட மணிக்கட்டில் வீசுவது அதிகமான பலன் தரும் என்பதால், குல்தீப் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரிஸ்ட் ஸ்பின்னுக்கு திணறுவார்கள் என்பதால், குல்தீப் இடம் பெற வாய்ப்புள்ளது.

ஆடுகளம் 'சுழற்பந்துவீச்சுக்காக மட்டுமே வடிவமைத்து இருப்பதால்' டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யக்கூடும்.

இ்ங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியை அதற்குள்ள குறைத்துமதிப்பிட்டு கேப்டன் ரூட் வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. ஜோப்ரா ஆர்ச்சர், ரிவர்ஸிங்கில் கடந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டிய ஆன்டர்ஸன், டாம் பெஸ், பட்லர் ஆகியோர் இல்லை.

இவர்களுக்கு மாற்றாக, விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், மொயின் அலி ஆகியோர் உள்ளே வருகிறார்கள். இந்த 4 பேருமே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள்.

ஆன்டர்ஸனைவிட ஸ்டூவர்ட் பிராட் நன்றாகவே பேட்டிங் செய்வார். வோக்ஸ் அதிரடி ஆட்டக்காரர் எந்த நேரத்தில் காட்டடி அடிப்பார் எனத் தெரியாது. கவுண்டி போட்டிகளில் சிறப்பா விளையாடியவர் பென் ஃபோக்ஸ் ஆக பேட்டிங்கில் வலிமையாக களமிறங்குகிறது இங்கிலாந்து அணி.

இந்திய மண்ணில் இதுவரை ஸ்டூவர் பிராட் சிறப்பாக பந்துவீசியது இல்லை என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. ஆதலால், நாளைய போட்டி எவ்வாறு அவருக்கு அமையப் போகிறது எனப் பார்க்கலாம்.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கடந்த காலங்களில் அமைத்து இந்திய அணி நிர்வாகம் கையைச் சுட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.

கடந்த 2017-ம் ஆண்டு புனேயில் நடந்த டெஸ்டில் ஸ்மித் வெளுத்து வாங்கி சதம் அடித்தார். 2012ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பீட்டர்ஸன் 186 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியில் இந்திய அணியில் ஜாகீர் கான் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர் இருந்தார். அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் அனைவருமே சுழற்பந்துவீச்சாளர்கள்.

சுழற்பந்துவீச்சு மீது அவ்வளவு நம்பிக்கை...

ஆனால் கடைசி நாளில் பந்து கண்டமேனிக்கு பந்து ட்ரன்ஆகியது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் மான்டி பனேசர், ஸ்வான் பந்துவீச்சில் இந்திய அணி சுருண்டது. இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கலாம்.

ஆதலால் இதுபோன்ற ஆடுகளத்தை நம்பி களமிறங்குவது இந்திய அணிக்கு நிச்சயம் "ஃபேக் பயர்" ஆகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. வரலாறு முக்கியம்......

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x