Published : 25 Nov 2015 09:16 AM
Last Updated : 25 Nov 2015 09:16 AM
6-வது டி 20 உலக கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூர், சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 நகரங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித் திருந்தது.
இதில் சென்னை, டெல்லி ஆகிய மைதானங்கள் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே ஆகிய கேலரிகளுக்கு மாநகராட்சி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காமல் உள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கம் ஊழல் பிரச்சினையில் சிக்கியிருந்தது.
இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்கம் நீதிமன்றம் வரை சென்று பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.
இதனால் பெரோஷாகோட்லா மைதானத்தில் டி 20 உலககோப்பை ஆட்டங்களை நடத்துவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் டி 20 உலககோப்பை போட்டி அமைப்பாளர்கள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து போட்டி நடைபெறும் இடங்கள், அட்டவணையை தயாரித்து ஐசிசி-க்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் ஐசிசி, இரு அட்டவணைகளை பிசிசிஐ ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. ஒரு அட்டவணையில் சென்னை இடம் பெற்று உள்ளது. மற்றொன்றில் சென்னை மைதானம் இல்லாமல் அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
சேப்பாக்கத்தில் போட்டி நடத்த வேண்டுமேன்றால் அனைத்து கேலரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்ய வேண்டும் என்று ஐசிசி விரும்புவதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் டி 20 உலககோப்பையின் ஆட்டங்கள் நடத்தப்படுவது சந்தேகம் தான். தற்போது ஐசிசி அனுப்பியுள்ள பட்டியலுக்கு பிசிசிஐ அனுமதி கொடுப்பதை பொறுத்து தான் சென்னையில் உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறுமா என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT