Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM
விளையாட்டு உலகம் சந்தித்த மிக மோசமான விபத்துகளில் ஒன்று 1958-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி நிகழ்ந்தது.
ஜெர்மனியில் உள்ள மியூனிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் யூரோப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, தரையில் இருந்து மேலெழும்பிய சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் 8 வீரர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த கோர விபத்து ஏற்பட்டது, அந்த அணியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த விபத்துக்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடட் அணி, பெல்கிரேட் நகரில் நடந்த போட்டி ஒன்றில் விளையாடி இருந்தது. இப்போட்டியில் ‘பஸ்பி பேப்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடட் அணியினர் ‘ரெட் ஸ்டார்’ அணிக்கு எதிரான போட்டியை 3-3 என்ற கோல்கணக்கில் டிரா செய்திருந்தனர். இருப்பினும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடட் அணி ஐரோப்பியன் கோப்பை கால்பந்தின் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
விபத்து நடந்த நாளில், அவர்கள் பயணம் செய்த விமானம் பெல்கிரேடில் சுமார் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. அதில் பயணித்த மான்செஸ்டர் யுனைடட் வீரர் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை ஓட்டல் அறையில் மறந்துவிட்டு வந்ததே இதற்கு காரணம்.
இதன்பிறகு எரிபொருள் நிரப்புவதற்காக மியூனிச் நகருக்கு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
மியூனிச் நகரில் இருந்த பனிப்பொழிவால் 2 முறை இந்த விமானத்தை மேலே எழுப்ப விமானி ஜேம்ஸ் தாயின் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் 3-வது முறையாக எடுத்த முயற்சியில் விபத்து ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT