Last Updated : 05 Feb, 2021 03:16 AM

 

Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: ரொனால்டோவும் ரத்த தானமும்

கால்பந்து உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 5). கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முழுப் பெயர், ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சாண்டோஸ் அவிரோ’ என்பதாகும். கால்பந்து போட்டிகளின்போது இந்த முழுப்பெயரையும் வர்ணனையாளர் சொல்லி முடிப்பதற்குள் பந்து பலரையும் கடந்துவிடும் என்பதால் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று சுருக்கி அழைக்கிறார்கள்.

ரொனால்டோவின் அப்பா ஜோஸ், தோட்டக்காரராக இருந்தார். குடிப்பழக்கம் கொண்டவரான அவர், குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் ரொனால்டோவின் அம்மாதான், பல வீடுகளில் சமையல் மற்றும் துணி துவைக்கும் வேலைகளைச் செய்து ரொனால்டோவைப் படிக்க வைத்தார். தங்களை படிக்க வைப்பதற்காக அம்மா, இரவில் நீண்ட நேரம் வரை பல்வேறு வீடுகளிலும் பணியாற்றி வந்ததாக ரொனால்டோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் தனது அம்மா பணத்துக்காக பட்ட கஷ்டங்களை ஈடு செய்யும் வகையில் இன்று கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரத்த தானம் செய்வதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விருப்பம் அதிகம். பல முறை இவர் தனது ரத்தத்தை தானமாக கொடுத்துள்ளார். செஞ்சிலுவை சங்கத்தின் விதிகளின்படி ஒருவர் தன் உடலில் பச்சை குத்திக்கொண்டால், குறைந்தபட்சம் அடுத்த 4 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.

தான் பச்சை குத்திக்கொண்டால் அடுத்த 4 மாதங்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற ஒரே காரணத்துக்காக பச்சை குத்தாமல் இருக்கிறாராம் ரொனால்டோ.

ரத்த தானம் செய்வதோடு மட்டுமின்றி, ஒரு முறை தனது எலும்பு மஜ்ஜையையும் ரொனால்டோ தானமாக கொடுத்துள்ளார் என்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x