Last Updated : 04 Feb, 2021 08:24 PM

 

Published : 04 Feb 2021 08:24 PM
Last Updated : 04 Feb 2021 08:24 PM

ரஹானே கடமையை நிறைவேற்றிவிட்டார்; ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக யாருக்கு வாய்ப்பு?- விராட் கோலி பதில்

இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள், விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி முழு நம்பிக்கையுடன் நாளை களமிறங்குகிறது. அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத கேப்டனாகச் செயல்பட்ட ரஹானே தலைமையில் இயங்கிய அணி, நாளை ஆக்ரோஷமான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய விராட் கோலி தலைமையில் இயங்கப்போகிறது.

காணொலி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய அணிக்கு மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஹானேவுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்ந்து, அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறோம். அனைவரும் ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறோம், அது இந்திய அணியின் வெற்றி மட்டும்தான்.

நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானே தனது கடமையை நிறைவேற்றி, தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். வெற்றியை நோக்கி இந்திய அணியை ரஹானே அழைத்துச் சென்றவிதம் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றிதான் எப்போதும் எங்கள் இலக்கு.

எனக்கும் ரஹானேவுக்கும் இடையே களத்துக்கும் வெளியேயும் நல்ல உறவு உண்டு. இருவரும் பேட்டிங் செய்யும் போது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பேட்டிங் செய்வோம். மைதானத்துக்கு வெளியேயும் அதிகமாகப் பேசுவோம். எப்போதும் தொடர்பிலேயே இருப்போம்.

அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய திறமை, தகுதி ரஹானேவுக்கு இருக்கிறது. இருப்பினும், போட்டி தொடங்கும் முன், என்னைத் தொடர்புகொண்டு கலந்துரையாடித்தான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை வழிநடத்தினார். அணியின் திட்டம் குறித்து நானும், ரஹானேவும் பல்வேறு விஷயங்களை ஆலோசித்துள்ளோம். இருவரின் புரிந்துணர்வுதான் அணியின் டெஸ்ட் வெற்றிக்குக் காரணம்.

இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்குவார்கள். இருவரிடமும் மிகப்பெரியதொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து தொடக்கவீரராக கில்லைத் தேர்வு செய்துள்ளோம்.

நாளை டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி இரு போட்டிகளில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் ரிஷப் பந்த் செயல்பாடு சிறப்பாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். தொடர்ந்து விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இருப்பார். அணியின் மேட்ச் வின்னர்''.

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x