Last Updated : 03 Feb, 2021 11:42 AM

 

Published : 03 Feb 2021 11:42 AM
Last Updated : 03 Feb 2021 11:42 AM

நினைவிருக்கிறதா? இந்தியப் பந்துவீச்சாளர் அசோக் டின்டா: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அசோக் டின்டா : கோப்புப்படம்

கொல்கத்தா


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அசோக் டின்டா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ேமற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான அசோக் டின்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் , 9 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 116 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த அசோக் டின்டா ஏராளமான அணிகளுக்காக விளையாடியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், ஆர்சிப ஆகிய அணிகளுக்காக திண்டா விளையாடியுள்ளார்.78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் அசோக் டின்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து நான் இன்று ஓய்வு பெறுகிறேன். இதுதொடர்பாக பிசிசிஐ மற்றும் கோவா கிரிக்கெட்அகாடெமிக்கும் மின்அஞ்சல் அனுப்பிவிட்டேன்.

எனக்கு 2005-06ம் ஆண்டு சீசனில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்பளித்து அறிமுகம் செய்த கங்குலிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உயர்ந்த நிலையை அடைவதற்கு பலரும் எனக்கு உதவி செய்துள்ளனர், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். எனுக்கு பல்வேறு சுதந்திரம் அளித்து கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக விளையாட துணையாக குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அசோக் டின்டா என்றவுடன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கும், டின்டாவுக்கும் இடையே நடந்த சர்ச்சை நினைவுக்கு வரும்.

கடந்த 2017-ம் ஆண்டுதான் கடைசியாக டின்டா ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஆனாலும், அவரின் பெயர் 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிகம் பேசப்பட்டது.

அசோக் டிண்டா பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ரன் அடிப்பார்கள், ரன்களையும் டின்டா வாரி வழங்குவார். இதனால், இந்த ஐபிஎல் போட்டியில் எந்த பந்துவீச்சாளர் மோசமாகப் பந்துவீசி ரன்களை வாரி வழங்கினால் அவரை டின்டா அகாடெமியில் சேர்ந்துவிட்டாயா என்று கிண்டலாக கேட்பார்கள்

2019- ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி மோதியது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சிஎஸ்கே கேப்டன் தோனி, 24 ரன்கள் சேர்த்தார், 2 ரன்கள் எடுக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.

சிஎஸ்கே அணியிடம் அதிகமாக ரன்களைக் விட்டுக்கொடுத்த உமேஷ் யாதவைக் குறிப்பிட்டும், அவரின் படத்தை வெளியிட்டும், " டின்டா அகாடெமியா, என்ன அது" என்று ஆர்சிபி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருந்தது. சிறிது நேரத்தில் அந்த ட்விட்டையும் ஆர்சிபி அணி நீக்கியது. ஆனால், பலரும் அந்த ட்விட்டுக்கு ரீட்விட் செய்து டின்டாவையும், உமேஷ் யாதவையும் கிண்டல் செய்தனர்.

ஆர்சிபி அணியின் ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டின்டா, அதற்கு பதிலடியாக தனது ட்விட்ர் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய கிரிக்கெட் சாதனைகளை வெளியிட்டு புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x