Last Updated : 01 Feb, 2021 12:15 AM

 

Published : 01 Feb 2021 12:15 AM
Last Updated : 01 Feb 2021 12:15 AM

சபாஷ் ! தினேஷ் கார்த்திக் தலைமை: முஷ்டாக் அலி டி20 தொடரில் 2-வது முறையாக தமிழகம் சாம்பியன்: சித்தார்த் கலக்கல் 

முஷ்டாக் அலி டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் தமிழக அணி

அகமதாபாத்


இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த்தின் அபாரமான பந்துவீச்சால் அகமதபாத்தில் நேற்று நடந்த சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தமிழக அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தமிழக அணியில் சிறப்பாகப் பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பரோடாவின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் விளையாடிய சித்தார்த் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஐபிஎல் டி20 தொடரில் சித்தார்த் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், வீரர்கள் விடுவிப்பு பட்டியலில் கொல்கத்தா அணி சித்தார்த்தை கழற்றிவிட்டது. ஆனால், முஷ்டாக்அலி கோப்பையில் ஆட்டநாயகனாக சித்தார்த் ஜொலித்திருப்பதால், கொல்கத்தா அணி தனது முடிவை வாபஸ் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

முதலில் பேட் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 2 ஓவர்கள் மீதமிருக்கும்போது, 123 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

லீக் முதல் எந்த ஆட்டத்திலும் தமிழக அணி தோல்வி அடையாமல் வாகை சூடியுள்ளது. லீக் சுற்றில் இமாச்சலம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் அணிகளையும், காலிறுதியில் ஹரியானாவையும், அரையிறுதியில் பஞ்சாபையும் தோற்கடித்தது தமிழக அணி.

தினேஷ் கார்த்திக் தலைமையில் கடந்த 2006-07ம் ஆண்டு முதல்முறையாக தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையை வென்றது, அதன்பின் 13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தினேஷ் கார்த்திக் தலைமை வென்று சாதித்துள்ளது.

தமிழக அணியில் ரவிச்சந்திர அஸ்வின்(இந்திய அணி) இல்லை, முரளி விஜய்(தனிப்பட்டகாரணங்களில் இல்லை) இல்லை, வாஷிங்டன் சுந்தர்(இந்திய அணி) கிடையாது, நடராஜன் (விடுப்பு) இல்லை, வருண் சக்கரவர்த்தி(என்சிஏ பயிற்சி)இல்லை, விஜய் சங்கர் இல்லை(காயம்), சந்தீப் வாரியர் இல்லை(காயம்), விக்னேஷ் இல்லை(கோவிட்-19) என முக்கிய வீரர்கள் யாரும் இல்லாமல் தமிழக அணி தினேஷ் கார்த்திக் கார்த்திக் தலைமையில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

இதன் மூலம் ஆழ்ந்த திறமையுள்ளது, கோப்பையை வெல்லும் திறன்படைத்தது தமிழக அணி என தினேஷ் கார்த்திக் நிரூபித்துள்ளார்.

ஆகமதாபாத் மொட்டேரோ ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து பந்துகள் நன்றாக சுழன்றன, அவ்வப்போது பந்தை டாஸ் செய்தப்து பவுன்ஸ் ஆகின. இதனால் கணித்து பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டிய நிலையில் இருந்தனர். மிதவேகப்பந்துவீசினாலும் நன்றாக ஸ்விங் ஆகியது.

ஆட்டநாயகன் விருது வென்ற சித்தார்த்

சுழற்பந்துவீச்சு நன்றாக எடுக்கிறது என்று தெரிந்து கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் 13 ஓவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். இதனால் 36 ரன்களுக்கு பரோடா அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சித்தார்த் பந்துவீச்சை குறிப்பிடும்போது, சாய் கிஷோர் பந்துவீச்சையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாகப்பந்துவீசிய கிஷோர் 4.82 எக்கானமி வைத்துள்ளார்.

பரோடா அணியைப் பொருத்தவரை விஷ்ணு சோலங்கி மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தால், இவரும் விக்கெட்டை இழந்திருந்தால், பரோடா அணி 80 ரன்களுக்குள் நீட்டி படுத்திருக்கும்.

டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பரோடா அணியின் கேப்டன் தேவ்தார், ராத்வா களமிறங்கினர். அபராஜித் வீசிய 2-வது ஓவரில் ராத்வா ஒரு ரன்னில் அருண் கார்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சாய் கிஷோர்

அதன்பின் பரோடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 6 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த பரோடா அணி அடுத்த 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களுக்கு 6 விக்ெகட் எனத் தடுமாறியது.

7-வது விக்கெட்டுக்கு சோலங்கி, காக்கடே இருவரும் நிலைத்து ஆடிய ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினர். இருவரும் சேர்ந்து 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சேத் 29 ரன்னில் சோனுயாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

நிதானமாக பேட் செய்த சோலங்கி 49 ரன்னில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். பரோடா அணியில் சோலங்கி 49, சேத் 29 ஆகியோரைத் தவிர மற்ற 7 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் பரோடா அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. தமிழக அணித் தரப்பில் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், அபராஜித், சோனு, முகமது தலா ஒரு விக்ெகட்டையும் வீழ்த்தினர்.

121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. நிசாந்த், ஜெகதீசன் இருவரும் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். ஜெதீசன் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த அபராஜித், நிசாந்துடன் சேர்ந்து நிதானமாக ஆடினார்.

நிசாந்த் 35 ரன்னில் பதான் பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 3பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷாருக்கான், அபராஜித் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஷாருக்கான் களமிறங்கியபின் தனது வழக்கமான அதிரடியான ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார். ஷாருக்கானின் பவர் ஹிட்டிங் ஷாட்கள் ஐபிஎல் அணிகளின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். கடந்த ஏலத்தில் அபராஜித் ஏலத்துக்கு வந்தபோதும் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் 18 ரன்னிலும், அபராஜித் 29 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து தமிழக அணி 7 விக்கெட் வி்த்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x