Last Updated : 29 Jan, 2021 05:37 PM

 

Published : 29 Jan 2021 05:37 PM
Last Updated : 29 Jan 2021 05:37 PM

முஷ்டாக் அலி டி20; தினேஷ் கார்த்திக் தலைமையில் 2-வது முறையாக பைனலில் தமிழக அணி: அருண் கார்த்திக் அதிரடியில் ராஜஸ்தான் வீழ்ந்தது

அருண் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம், திண்டுக்கல் வீரர் முகமதுவின் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நடந்த முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 8 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பில் தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை பைனலில் கர்நாடக அணியிடம் தமிழக அணி தோல்வி அடைந்தது.

கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், அருண் கார்த்திக்கும் 4-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் அருண் கார்த்திக் 54 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து (3 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழக அணியில் பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பிய திண்டுகல்லைச் சேர்ந்த எம். முகம்மது, 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்குத் துணையாக அமைந்தார்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை அணியின் கேப்டன் அசோக் மனேரியா 51 ரன்கள், அஜித் குப்தா 45, ஆதித்யா கர்வால் 29 ரன்கள் சேர்த்ததுதான் ஓரளவுக்குச் சிறப்பான ரன்களாகும். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

பாபா அபராஜித் வீசிய முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் வீரர் பரத் சர்மா அடித்த ஷாட்டை சாய் கிஷோர் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

அடுத்து வந்த கேப்டன் மனேரியா, கர்வாலுடன் சேர்ந்து ஆடினார். கர்வால் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு மனேரியா, குப்தா இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து அணியைக் கட்டமைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மனேரியா 51 ரன்களில் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 120 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

ஆனால், அடுத்த 34 ரன்களுக்குள் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியினர் இழந்தனர். அதிலும் குறிப்பாக 19-வது ஓவரில் மட்டும் முகமது வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. தமிழக அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டுகலையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. ஹரிநிசாந்த் (4), பாபா அபராஜித் (2) ஆகியோர் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜெகதீசன், அருண் கார்த்திக் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஜெகதீசன் நிதானமாக ஆட, கார்த்திக் அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். ஜெகதீசன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், அருண் கார்த்திக்குடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். மறுபுறம் அருண் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அருண் காரத்திக் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்ளிட்ட 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழக அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x