Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM
ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 29).
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர். இவரது அப்பா லக்ஷ்மண் சிங் ரத்தோர், இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தார். தந்தையைப் போலவே தானும் ராணுவத்தில் இணைய விரும்பிய ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், சிறுவயதில் கிரிக்கெட் விளையாட்டிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். தனது 15-வது வயதில், ரஞ்சி கோப்பையில் ஆடும் மத்தியப் பிரதேச அணிக்காக ஆட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தந்தையின் வழியில், 1990-ம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ராணுவ வீரராக இருந்துகொண்டே துப்பாக்கி சுடும் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரிலும் அவர் பங்கேற்றுள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டபிள் டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களாலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்பதை ரத்தோர் நிரூபித்தார். ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்ற பிறகு, இந்தியாவில் துப்பாக்கி சுடும் வீரர்கள் மத்தியில் புத்தெழுச்சி ஏற்பட்டது.
ஒலிம்பிக் போட்டி மட்டுமின்றி காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஆசிய விளையாட்டில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட சர்வதேச போட்டிகளில் மொத்தம் 26 பதக்கங்களை ரத்தோர் வென்றுள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்தும், ராணுவத்தில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு, நரேந்திர மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில் அவர் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT