Published : 24 Jan 2021 10:23 AM
Last Updated : 24 Jan 2021 10:23 AM

ரொம்ப மோசம்..ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றவுடன் ஆஸி. வீரர்கள் செல்லும் லிப்டில் கூட எங்களை அனுமதிக்கவில்லை: அஸ்வின் ஆதங்கம்

ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம்

புதுடெல்லி


மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வென்றவுடன் ஆஸ்திரேலிய நிர்வாகம் நடத்தும் முறையில் மாற்றம் வந்துவிட்டது. ஆஸி.வீரர்கள் செல்லும் லிப்டில் கூட இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லை என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றது

அதிலும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்திராத ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது. இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது.

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 1-1 என்ற நிலைக்கு வந்தபின் இந்திய வீரர்களை நடத்தும் ஆஸ்திேரலிய நிர்வாகத்தின் அணுகுமுறையில் மாற்றம் இருந்தது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

குறித்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதருடன், ரவிச்சந்திர அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கலகலப்பாகப் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது:

மெல்போர்ன் டெஸ்டில் நாங்கள்(இந்திய அணி) வென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தபின் ஆஸ்திரேலிய நிர்வாகம் நடக்கும் அணுமுறையில்மாற்றம் இருந்தது. சிட்னி டெஸ்டுக்காக சிட்னி நகரும் வந்தபின்,எங்களை அறையிலிருந்து வெளியே செல்லக்கூட அணுமதி மறுத்தார்கள். அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

அதிலும் முக்கியமாக ஆஸ். வீரர்களுடன் ஒன்றாக லிப்டில் செல்லக்கூட எங்களை அனுமதி்க்கவில்லை. இது எங்களுக்கே வியப்பாக இருந்தது. ஏனென்றால், நாங்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் ஒரே மாதிரியான பயோ-பபுளில்தான் இருக்கிறோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் லிப்டில் செல்லும்போது, லிப்டில் இடம் இருந்து அதில் நாங்கள் செல்ல முயன்றால் எங்களை அனுமதி்க்கமாட்டார்கள்.

உண்மையிலேயே அந்த நேரம் மிகவும் மோசமாக உணர்ந்தோம். இரு தரப்பு அணியினரும் ஒரே பயோ-பபுளில் இருக்கும் நிலையில் ஒருதரப்பினரை மட்டும் லிப்டில் அனுமதித்து மற்றவர்களை காத்திருக்க வைப்பது ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. ஒரே மாதிரியான பயோ-பபுளில் இருந்தாலும் ஆஸி. வீரர்களுடன் லிப்டில் இடத்தை பகிர்ந்து கொள்ள இந்தியவீரர்களுக்கு அனுமதியில்லை.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x