Last Updated : 24 Jan, 2021 09:36 AM

 

Published : 24 Jan 2021 09:36 AM
Last Updated : 24 Jan 2021 09:36 AM

இங்கிலாந்து அணிக்கு உதவி: சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என திராவிட் அளித்த மின்அஞ்சலை வெளியிட்ட பீட்டர்ஸன்


இந்தியாவுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு உதவி செய்யும் வகையில் தரமான சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் வழங்கிய நுணுக்கங்கள், உத்திகள் அடங்கிய மின்அஞ்சலை பீட்டர்ஸன் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், சிப்லி, கிராலே இருவரும் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் லசித் எமுல்தினியாவின் பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். முதல் டெஸ்டிலும், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் லசித் பந்துவீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் விதத்தில் இதை வெளியிட்டுள்ளதாக பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

திராவிட் அனுப்பிய மின்அஞ்சல்

இந்திய கிரிக்கெட்டின் சுவர் என அழைக்கப்படும் திராவிட் வழங்கிய மின்னஞ்சலை அனுப்பி பகிர்ந்துள்ளேன். இதை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், டாம் சிப்ளி, கிராலே இருவருக்கும் கொடுங்கள் என்று பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்

பீட்டர்ஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஹாய், இங்கிலாந்து கிரிக்கெட். நான் பகி்ர்ந்துள்ள இந்த பக்கத்தை அச்சிட்டு சிப்ளி, கிராலேவிடம் கொடுங்கள்.

தேவைப்பட்டால் என்னிடம் பேசச் சொல்லுங்கள், தேவையான ஆலோசனைகள் வழங்குகிறேன். கிராலே, சிப்ளி இருவரும் இதைப்படிக்க வேண்டும். சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என ராகுல் திராவிட் எனக்கு அனுப்பிய மின்அஞ்சல் பகுதி”என த் தெரிவித்துள்ளார்.

பீட்டர்ஸன் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்ய மிகவும் திணறினார். பலமுறை லெக் ஸ்பின்னர்களிடமும், ஆஃப் ஸ்பின்னர்களிடமும் விக்கெட்டை பீட்டர்ஸன் இழந்துள்ளார். இதையடுத்து, ராகுல் திராவிட்டிடம் சென்று சுழற்பந்துவீச்சை ஆடுவது குறித்து பீட்டர்ஸன் உதவி கேட்டார்.

இதையடுத்து, ராகுல் திராவிட் மிகப்பெரிய மின்அஞ்சலை பீட்டர்ஸனுக்கு அனுப்பி வைத்தார். அதில் தரமான சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொண்டு பேட் செய்வது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் உத்திகள் அடங்கி இருந்தன. திராவிட் தனக்கு செய்த உதவி குறித்து பீட்டர்ஸன் தான் எழுதிய கே.பி. ஆட்டோபயோகிராபி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட் தான் அனுப்பிய கடிதத்தில், “ சுழற்பந்துவீச்சாளர்கள் கையில் இருந்து பந்து வெளியே வரும்போதே கணித்து ஆடத் தொடங்கிவிட வேண்டும். பந்து பிட்ஸ் ஆனபின் முடிவு எடுக்கக்கூடாது. ஸ்வான், மாண்டி பனேசர் ஆகியோரின் பந்துவீச்சை கால் காப்பு இல்லாமல் ஆடிப் பழங்குங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆதலால், ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றியை அதிகமாக கொண்டாடாதீர்கள் என பீட்டர்ஸன் சமீபத்தில் ட்விட் செய்திருந்தார்.

இந்த சூழலில் தனது அணி வீரர்களுக்கு உதவும் வகையி்ல், இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் வகையில் திராவிட் வழங்கிய டிப்ஸ் அடங்கிய மின்அஞ்சலை இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x