Last Updated : 23 Jan, 2021 04:46 PM

 

Published : 23 Jan 2021 04:46 PM
Last Updated : 23 Jan 2021 04:46 PM

வீரர்களுடன் குடும்பத்தினரை அனுப்பாவிட்டால் ஆஸி.பயணத்துக்குச் செல்லமாட்டோம்: ரவி சாஸ்திரியின் துணிச்சலைப் புகழ்ந்த பயிற்சியாளர் ஸ்ரீதர்

வீரர்களுடன் குடும்பத்தினரையும் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பயணத்துக்குச் செல்ல முடியாது என்று பிசிசிஐ அமைப்பிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்தார் என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பகிர்ந்தார்.

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற கவலையில் இருந்தனர். ஆனால், அந்த நேரத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ அமைப்பிடம் வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் உடன் வர வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் கூறியதாவது:

''உங்களுக்கு ஒன்று தெரியுமா அஸ்வின். துபாயில் ஐபிஎல் போட்டி முடிந்தபின் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தோம். ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் 48 மணி நேரத்துக்கு முன், திடீரென வீரர்களிடம், குடும்பத்தினர் யாரும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவர அனுமதியில்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

ஆஸ்திரேலியப் பயணம் தொடங்கும் முன்பே இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங்கை ஆஸி. வாரியம் தொடங்கிவிட்டது. துபாயில் இரவு நேரம், ஆஸ்திரேலியாவில் பகல் நேரத்தில் இந்தச் செய்தியை எங்களிடம் தெரிவித்தனர்.

துபாய், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் நேரம் வேறுபட்டு இருந்ததால், அங்கேயும் நாங்கள் பேச வேண்டிய நிலை இருந்தது. ஆஸ்திரேலிய அரசு மிகவும் கண்டிப்பானது. வீரர்களின் குடும்பத்தினரை அழைத்துவர அனுமதிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துவிட்டார்கள்.

ஆனால், அணியில் 7 வீரர்கள் தங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் உடன் அழைத்து வந்திருந்தார்கள். இதை எப்படி அவர்களிடம் சொல்வது எனத் தயங்கினோம்.

அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தச் சம்பவத்தில் தலையிட்டார். உடனடியாக ஜூம் செயலி வழியாகக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் துபாயில் அறையில் இருந்ததால், கலந்து கொண்டோம்.

வீரர்களுடன் குடும்பத்தினரும் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கா விட்டால், நாங்கள் யாரும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டோம். உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா பற்றி உங்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த 40 ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். அவர்களிடம் எவ்வாறு பழக வேண்டும், எவ்வாறு பேரம் பேச வேண்டும் என்பது தெரியும் என்றார்.

ரவி சாஸ்திரி கூறியதை பிசிசிஐ அதிகாரிகள் கவனத்துடன் கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு ஆஸ்திரேலிய அரசு அவசர அவசரமாகப் பணிகளைச் செய்து அந்த வார இறுதிக்குள் அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் அனுமதி பெற்றுக் கொடுத்தது''.

இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

அப்போது அஸ்வின் தனக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிவித்தார். அஸ்வின் கூறுகையில், “2021-ம் ஆண்டு தொடங்கும் முன், மெல்போர்னில் ஒரு சம்பவத்தை எதிர்கொண்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எங்களை அழைக்கும்போது, என்ன சொன்னார்கள் தெரியுமா. நீங்கள் ஏற்கெனவே துபாயில் மூன்றரை மாதங்கள் கடுமையான பயோ-பபுள் சூழலில் இருந்தீர்கள்.

இங்கு வந்தால் அதுபோன்று கடுமையான விதிகள் இருக்காது என்றனர். 14 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. அதன்பின் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காபி குடிக்கப் போகலாம், ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்லலாம் என்றார்கள்.

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற சமனில் இந்தியா வந்தவுடன் ஆஸி. நிர்வாகத்தின் குணமும் மாறியது. இந்திய வீரர்கள் அனைவரும் அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது என்றனர்.

எப்படி வெளியே வராமல் இருக்க முடியும். நான் என்னுடைய மனைவி, குழந்தைகளுடன் வந்திருக்கிறேன். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஊடகத்தினர் பார்வை அனைத்தும் இந்திய வீரர்கள் மீது இருந்தது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x