Last Updated : 20 Jan, 2021 07:17 PM

 

Published : 20 Jan 2021 07:17 PM
Last Updated : 20 Jan 2021 07:17 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்ஸன் கேப்டனாக நியமனம்; ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து நீக்கம்: விடுவிக்கப்பட்ட 8 வீரர்கள் யார்?

2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸன் கேப்டனாக நியமித்து ராஜஸ்தான் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 17 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. அதில் முக்கியமானவர் ஸ்டீவ் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு வேண்டுமானால் ஸ்மித் சிறந்த கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. கடந்த ஐபிஎல் தொடரில் கடினமாகப் போராடியும் ப்ளே ஆஃப் சுற்றை அடைய முடியவில்லை.

தனிப்பட்ட முறையிலும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த ஸ்மித், மற்ற போட்டிகளில் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து 311 ரன்கள் மட்டுமே தொடரில் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்மித்தின் ஸ்ட்ரைக் ரேட் 131 ஆகவும், சராசரி 25 ஆகவும் சரிந்துவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு தொடரின்போது, ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்குப் பெரிய அளவில் ஸ்மித் கைகொடுக்கவில்லை. 2018-ம் ஆண்டு சீசனில் ஸ்மித் பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக விளையாடவில்லை. ரஹானே கேப்டன்ஷிப்பில் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் வரை 2018-ல் சென்றது.

ஆனால், ஸ்மித் வந்தவுடன் ரஹானே கழற்றி விடப்பட்டு, மீண்டும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுவரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஸ்மித்தின் செயல்பாடு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கடந்த இரு தொடர்களிலும் மனநிறைவாக இல்லை என்பதால், 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மின்னல் வேகப்பந்துவீச்சு மூலம் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர், மேட்ச் வின்னராக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆன்ட் ரூ டை, டேவிட் மில்லரும் அணியில் நீடிக்கின்றனர்.

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “உண்மையில் எனக்கு மிகப்பெரிய கவுரவமாக அமைந்துள்ளது. எனக்கு ராஜஸ்தான் அணி மிகவும் நெருக்கமானது. கடந்த சில ஆண்டுகளாக நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். என் முன் இருக்கும் சவால்களைத் திறமையாகச் சமாளிப்பேன் என நம்புகிறேன். சிறந்த வீரர்களான ராகுல் திராவிட், ரஹானே, ஸ்மித் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அனுபவம் எனக்குக் கை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

சஞ்சு சாம்ஸன், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேஷியா, மகிபால் லோம்ரார், கார்த்திக் தியாகி, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கத், மயங்க் மார்கண்டே, யாஹஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், மனன் வோரா, ராபின் உத்தப்பா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்புத், ஓஸ்னே தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரன், அனிருத் ஜோஷி, சசாங் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x