Last Updated : 20 Jan, 2021 12:41 PM

 

Published : 20 Jan 2021 12:41 PM
Last Updated : 20 Jan 2021 12:41 PM

ரொம்ப அதிகமாக கொண்டாடாதீங்க; கவனம்; உண்மையான அணி வருகிறது: இந்திய அணியை எச்சரித்த பீட்டர்ஸன்

ஆஸி. அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை அதிகமாக இந்திய அணியினர் கொண்டாட வேண்டாம். அடுத்த இரு வாரங்களில் உண்மையான கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 32 ஆண்டுகளாக காபா மைதானத்தில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியை இந்தியாவிடம் கண்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் காயத்தால் நாடு திரும்பிய நிலையில், இளம் அறிமுக வீரர்கள் சேர்ந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்திய அணியின் இந்த சாதனை வெற்றியை கிரிக்கெட் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டி ரூ.5 கோடி போனஸும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. அதுதான் உண்மையான கிரிக்கெட் அணி. அந்த அணியுடன் இந்திய அணி மோதி வெல்லட்டும். அதுவரை கொண்டாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் விஷமத்தனமாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. பிப்ரவரி 5-ம்தேதி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் இரு போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கின்றன.

கெவின் பீட்டர்ஸன்

இந்தியா வரும் இங்கிலாந்து அணிதான் வீரமான, துணிச்சலான அணி. அந்த அணியை வீழ்த்துமா இந்திய அணி என்ற ரீதியில் பீட்டர்ஸன் கருத்து அமைந்துள்ளது.

கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும். ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x