Last Updated : 18 Jan, 2021 05:41 PM

 

Published : 18 Jan 2021 05:41 PM
Last Updated : 18 Jan 2021 05:41 PM

சிராஜ் உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்; ‘ஒரு சிறுவன், முழுமையான மனிதராகிவிட்டார்’- பிசிசிஐ, சேவாக் புகழாரம்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹீரோவாக ஜொலித்தமைக்கு பிசிசிஐ, வீரேந்திர சேவாக், இயான் பிஷப் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. ஆதலால், இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு இன்று ஆட்டமிழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4-வது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் ஷமி, பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில், அணியின் பந்துவீச்சுக்கு சிராஜ் தலைமை ஏற்றுள்ளார். சிறப்பாகப் பந்துவீசிய சிராஜ், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸி. அணியை 294 ரன்களில் சுருட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சிராஜ் ஆஸ்திரேலியப் பயணத்தில் இருக்கும்போது ஹைதராபாத்தில் அவரின் தந்தை உயிரிழந்தபோதும், அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்லாமல் கிரிக்கெட் பயிற்சி எடுத்து தனது இலக்கின் மீது தீரா பற்றோடு இருந்தார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சிராஜ் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் சிராஜின் பந்துவீச்சை முன்னாள் வீரர் சேவாக், மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் இயான் பிஷப், பிசிசிஐ ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஆஸ்திரேலியப் பயணத்தில் கிரிக்கெட்டில் சிறுவனாகக் களமிறங்கிய ஒருவர், இன்று முழுமையடைந்து மனிதராகிவிட்டார். அவர் சிராஜ்தான். தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரிலேயே வேகப்பந்துவீச்சுக்குத் தலைவராக உயர்ந்து, வழிநடத்திவிட்டார். புதிய வீரர்கள் இந்திய அணிக்குள் வந்து அவர்கள் செயல்படும் விதம், நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும். பார்டர் கவாஸ்கர் கோப்பையை நாம் தக்கவைத்தால் சரியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயான் பிஷப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ எந்த ஆறுதலும் இல்லை, சிறிய கவலையும் இல்லை. ஆனால், ஆஸி.யில் சிராஜ் இருந்தபோது, அவர் தனது தந்தையை இழந்தும், தொடர்ந்து தொடரிலேயே பயணிக்க விரும்பினார். தனது முதலாவது டெஸ்ட் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதற்குப் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பாராட்டுச் செய்தியில், “பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு முன்பாக சிராஜ் தனது தந்தையை இழந்தார். அதன்பின் தனக்குத்தானே உறுதி ஏற்றுக்கொண்டார். அந்த உறுதியை இன்று நிறைவேற்றிவிட்டார். சிராஜ், உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ எனத் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x