Last Updated : 11 Jan, 2021 02:48 PM

 

Published : 11 Jan 2021 02:48 PM
Last Updated : 11 Jan 2021 02:48 PM

வீழ்வோம் என நினைத்தாயோ? : ஆஸி. வீரர்களை தண்ணி குடிக்க வைத்த அஸ்வின், விஹாரி: பந்த் இன்னிங்ஸ் பிரமாதம்: சிட்னி டெஸ்ட் டிரா

சிட்னி டெஸ்டை டிரா செய்த மகிழ்ச்சியில் விஹாரியுடன், கேப்டன் ரஹானே : படம் உதவி ட்விட்டர்

சிட்னி


ரிஷப்பந்தின் பிரமாதமான இன்னிங்ஸ், அஸ்வின், விஹாரியின் விடா முயற்சி பேட்டிங், புஜாராவின் பொறுமை ஆகியவற்றால் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி்ல் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 94 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆட்டநாயகனாக ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடனும், விஹாரி161 பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 131 ஓவர்கள் வரை நின்று5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்து டிரா செய்தது.

407 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி நாளான இன்று ஆஸி. பந்துவீச்சாளர்கள் பாடிலைன் பந்துவீச்சை வீசுவார்கள், பவுன்ஸர்களைத் தாக்குப்பிடிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் சிறப்பு இல்லாவிட்டாலும் டிரா செய்தாலே அதியம், தோல்வி தொடர்ந்துவிடக்கூடாது என்று எண்ணப்பட்டது.

ஏனென்றால், சிட்னி மைதானத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்திய அணி ஒரு வெற்றிகூட பெற்றது இல்லை. இதுவரை 12 போட்டிகளை சிட்னியில் இந்திய அணி விளையாடி அதில் ஒரு வெற்றியும் 6 தோல்வியும் அடைந்துள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு கடைசியாக சிட்னியில் இந்திய அணி பிஷன்சிங் பேடி தலைமையில் வென்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்னில் இந்திய அணி வென்றது அதன்பின் ஏறக்குறைய 42 ஆண்டுகளாக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிரா செய்தது இந்திய அணி.

அதுமட்டுமல்லாமல் கடந்த 18ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் இந்திய அணி நிலைத்து விளையாடுவது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடைசியாக கடந்த 2002ம் ஆண்டு லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 109.4 ஓவர்கள் வரை இந்திய அணி நிலைத்து ஆடியது.

இந்தப் போட்டியில்இந்திய அணி 131 ஓவர்கள் வரை நின்று5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்து டிரா செய்தது.

கேப்டனாகப் பொறுப்பேற்று ரஹானே தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்றுள்ளநிலையில், சிட்னி டெஸ்டில் தோல்வியைச் சந்தி்த்துவிடுவாரோ என எண்ணப்பட்டது. முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத கேப்டன் எனும் பெருமையை தோனியோடு ரஹானே பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த போட்டியை டிரா செய்ததற்கு முக்கியப் பங்களிப்பு ரிஷப்பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகிய 4 வீரரக்ளைத்தான் குறிப்பிட முடியும். ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், ரஹானே ஆட்டமிழந்தபின், புஜாரா, ரிஷப்பந்த் ஆடிய இன்னிங்ஸ் ஆஸி. மண்ணில் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இருவரும் இணைந்து 148ரன்கள் சேர்த்து ஆஸி. அணிக்கு சிம்ம சொப்னமாக மாறினர்.

அதிலும் ரிஷப்பந்த் தொடக்கத்தில் நிதானமாக ஆடி அதன்பின் டி20 ஆட்டத்தைக் கையில் எடுத்து ஆஸி.பந்துவீச்சை நொறுக்கிவிட்டார். துரதிருஷ்டமாக 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 12பவுண்டரிகள் அடங்கும்.

பொறுமைக்கு பெயரெடுத்த, புஜாரா 77 ரன்களில்(12பவுண்டரிகள்) ஆட்டமழந்தார். இருவரும் சென்றபின் ஆட்டம் ஆஸி.யின் கரங்களுக்குள் சென்றுவிட்டதோ என இந்திய ரசிகர்கள் அச்சப்பட்டனர்.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு அஸ்வின், விஹாரி ஜோடி ஆஸ்திரேலிய வீரர்களின் பொறுமையைச் சோதித்துவிட்டனர். இருவரும் சேர்ந்து 42.8 ஓவர்கள் வரை கடைசிவரை நிலைத்து ஆடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தண்ணி குடிக்க வைத்தனர்.

இருவரையும் ஆட்டமிழக்க வைக்க ஆஸி. பந்துவீச்சாளர்கள் பவுன்ஸர்கள், பாடிலைன் பந்துவீச்சு என வகையாக வீசினாலும் நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம், விடமாட்டோம் என்ற ரீதியில் கடைசிவரை நிலைத்து ஆடிய போட்டியை டிரா செய்தனர்.

கடந்த 1979-ம் ஆண்டுக்குப்பின் ஆசியாவுக்கு வெளியே 4-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நீண்டநேரம் பேட்டிங் செய்தது இதுதான் முதல்முறையாகும்.

இந்திய அணியில் பல வீரர்கள் காயமடைந்து “மினி ஹாஸ்பிடலாக” மாறினாலும், தோல்வி அடையவில்லை என்ற பெருமிதத்துடன் மகிழ்ச்சியுடன் ஓய்வறையில் இருப்பார்கள்.

இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட்டுக்கு இன்று 48-வது பிறந்தநாள். இந்திய அணியின் அஸ்வின், விஹாரி சுவர் போல் நின்றுபோட்டியை டிரா செய்து திராவிட்டுக்கு பரிசுளித்துவிட்டனர்.

ஹனுமா விஹாரி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே மிகவும் மெதுவான இன்னிங்ஸை விளையாடிய வீரர்எனும் பெயர்எடுத்து, ஆஸி வீரர்களின் பொறுமையைச் சோதித்தார். தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை நிலைத்து ஆடிய விஹாரியின் அர்ப்பணிப்பு பேட்டிங்கும் பாராட்டுக்குரியது.

அஸ்வின்,விஹாரி இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும், அடுத்ததாக ஜடேஜா பேட்டிங் செய்ய தயாராக இருந்தார் என்று கூறப்பட்டாலும், அதற்கு கடைசிவரை வேலையில்லாமல் செய்துவிட்டனர்.

கிரிக்கெட்டில் கேட்ச் மிஸ், லாஸ் மேட்சஸ் என்பார்கள். அதுபோல், ஆஸி. கேப்டன் பெய்ன் இன்று மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். அவர் கேட்சுகளை கோட்டவிட்டதற்கான பலன் வெற்றியை பெறமுடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த 100 ஆண்டுகளிலேயே ஆஸி. மண்ணில் மிக்குறைந்த அளவு போட்டிகளில் வெற்றிப் பெற்றுக்கொடுத்த கேப்டன் பெய்ன் எனும் பெயரையும் எடுத்துள்ளார்.

ஆஸி. தரப்பில் ஹேசல்வுட், லேயான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x