Last Updated : 07 Jan, 2021 03:14 AM

 

Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய மல்யுத்தத்தின் முன்னோடி

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை மல்யுத்தம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ்பெற்ற விளையாட்டாக இருந்துள்ளது. பீமன், ஜராசந்தன், துரியோதனன் போன்ற இதிகாச புருஷர்கள் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது.

இப்படி பண்டைய காலத்தில் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருந்த மல்யுத்தத்தை மீண்டும் இந்தியாவில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை ஜதீந்திர சரண் குஹோவைச் சேரும். 1892-ம் ஆண்டில் கொல்கத்தா நகரில் மல்யுத்த வீரர்களைக் கொண்ட பரம்பரையில் ஜதீந்திர சரண் குஹோ பிறந்தார். ஜதீந்திராவை அவரது அப்பா ராம் சரண், ‘கோபர்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியதால், பின்னாளில் அனைவராலும் அவர் ‘கோபர் குஹோ’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

சிறுவயதில் மல்யுத்தத்தில் ஆர்வம் இல்லாதவராகத்தான் கோபர் குஹோ இருந்துள்ளார். பின்னாளில் அவரது குடும்பத்தினர், தங்கள் பரம்பரைக்கு புகழ்பெற்றுத் தந்த மல்யுத்தத்தில் கோபரும் பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் 15 வயது முதல் தனது மாமாவான கேத்ராசரணிடம் கோபர் பயிற்சி பெறத் தொடங்கினார்.

நீண்டகால பயிற்சியைத் தொடர்ந்து 1919-ம் ஆண்டுமுதல் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற கோபர் குஹோ, வெற்றி மீது வெற்றியைக் குவித்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக 1921-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக லைட் ஹெவிவெயிட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். கோபர் குஹோவின் இந்த வெற்றி இந்தியர்களிடையே, குறிப்பாக வடமாநில இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. கோபர் குஹோவும், தனக்கென்று புதிய பாணி மல்யுத்தத்தை உருவாக்கி அதில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இதனாலேயே இந்திய மல்யுத்தத்தின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x