Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை பெற்றுத்தந்த ஆல்ரவுண்ட் நாயகன் கபில்தேவின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 6). இந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய அவர் பட்ட பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
1970-களின் இறுதியில் ஹரியாணா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். ஆனால் இப்படி சிறப்பாக பந்துவீசியும், இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றுள்ளார் கபில்தேவ்.
இந்திய அணியின் அப்போதைய தேர்வுக்குழு தலைவரான ராஜ்சிங் துங்கர்பூரின் வீட்டைக் கண்டுபிடித்து, அவர் முன் போய் நின்றார். அந்தச் சமயத்தில் துங்கர்பூர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருந்தார். “அவசரமாக வெளியில் செல்கிறேன். வந்த பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.
மதியத்தில் வீட்டை விட்டு கிளம்பிய துங்கர்பூர், அணியை தேர்வு செய்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்துதான் வந்தார். வாசலில் அவருக்காக அப்போதும் கபில்தேவ் காத்திருந்தார். கபில்தேவைப் பற்றியும், அவரது பந்துவீசும் திறனைப் பற்றியும் ஏற்கெனவே அறிந்திருந்த துங்கர்பூரின் மனதை, அவர் தனக்காக பல மணிநேரம் சாலையில் காத்திருந்த சம்பவம் உருக்கியது. உடனடியாக கிரிக்கெட் வாரிய தலைவருக்கு போன் செய்து, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியினருடன் கபில்தேவின் பெயரையும் சேர்க்கச் சொன்னார். இப்படி போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ், இந்த தொடரில் சிறப்பாக ஆட, அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகாரப்பூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். 1978-ம் ஆண்டில் நடந்த இந்த தொடரில் தன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT