Published : 05 Jan 2021 04:35 PM
Last Updated : 05 Jan 2021 04:35 PM

42 ஆண்டு வெற்றிப் பஞ்சம் தீருமா? சிட்னி டெஸ்டில் தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரஹானே

இந்திய அணியின் கேப்டன் ரஹானே : கோப்புப்படம்

சிட்னி


சிட்னியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வென்று தோனியின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரஹானே சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவிக்கு குழந்தை பிறப்பு காரணமாக முதல் டெஸ்ட் முடிந்தபின், நாடு திரும்பினார். முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

2-வது டெஸ்டில் ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமனில் உள்ளது.

இதுவரை ரஹானே 3 டெஸ்ட் போட்டிகளுக்கு இ்ந்திய அணிக்கு தலைமை ஏற்று நடத்தி, 3 போட்டிகளிலும் வெற்றி தேடித் தந்துள்ளார். இதில் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், 2018-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானடெஸ்ட், 2020ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ரஹானே கேப்டன்ஷிப்பில் இந்திய அணி வென்றுள்ளது.

கேப்டனாகப் பொறுப்பேற்று தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோனி மட்டுமே வென்றுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு கும்ப்ளேவுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி கேப்டன் பொறுப்பை ஏற்று தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்றார். அதன்பின் வந்த கோலிகூட 4 வெற்றிகள் பெறவில்லை.

ஆனால், தற்போது ரஹானே தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்றுள்ளநிலையில், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 4 வது வெற்றியைப் பெற்றால், தோனியின் சாதனையை ரஹானே சமன் செய்ய முடியும்.

இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஹானே ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களைக் கடக்க உள்ளார், தற்போது 797ரன்களுடன் இருக்கும் ரஹானேவுக்கு இன்னும் 203 ரன்கள் மட்டுமே தேவை. 203 ரன்களை அடுத்துவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே அடித்துவிட்டால், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் சேர்த்த 5-வது இந்திய வீரர் எனும் பெருமையை ரஹானே பெறுவார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே வெளிநாடுகளி்ல் சென்று 3 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 109 ரன்கள் மட்டுமே தேவை. தற்போது ரஹானே 2891 ரன்களுடன் உள்ளார். இதுவரை 9 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே வெளிநாடுகளில் சென்று 3 ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளார்கள்.

அதில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் 106 போட்டிகளில் 8,705 ரன்களை வெளிநாடுகளில் மட்டும் அடித்துள்ளார்.

சிட்னி மைதானத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்திய அணி ஒரு வெற்றிகூட பெற்றது இல்லை. இதுவரை 12 போட்டிகளை சிட்னியில் இந்திய அணி விளையாடி அதில் ஒரு வெற்றியும் 6 தோல்வியும் அடைந்துள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு கடைசியாக சிட்னியில் இந்திய அணி பிஷன்சிங் பேடி தலைமையில் வென்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்னில் இந்திய அணி வென்றது அதன்பின் ஏறக்குறைய 42 ஆண்டுகளாக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டில் சிட்னி மைதானத்தில் கோலி தலையிலா இந்திய அணி 622 ரன்கள் சேர்த்து, ஆஸி. அணிக்கு பாலோஆன் வழங்கியது. ஆஸ்திரேலிய அணி 300 ரன்களில்ஆல்அவுட் ஆகியது. ஆனால், மழை திடீரென பெய்து, ஆட்டம் டிராவில் முடிந்தது. மழைபெய்யாதிருந்தால், இந்திய அணி கடந்த ஆண்டே வரலாற்று வெற்றி பெற்றிருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x