Last Updated : 05 Jan, 2021 12:19 PM

 

Published : 05 Jan 2021 12:19 PM
Last Updated : 05 Jan 2021 12:19 PM

இலங்கை சென்ற இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டருக்கு கரோனா தொற்று : வேகப்பந்துவீச்சாளர் ஒருவரும் தனிமை

கோப்புப்படம்

கொழும்பு


இலங்கைப் பயணத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி, வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மொயின் அலியுடன் நெருக்கமாக அமர்ந்து விமானத்தில் பயணித்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக இலங்கையின் கொழும்பு நகருக்கு நேற்று இங்கிலாந்துஅணி வீரர்கள் வந்து சேர்ந்தனர்.

இதில் இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் நெருக்கமாக அமர்ந்து பயணித்த கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ இலங்கையின் ஹம்பனோட்டா விமானநிலையத்தில் இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் வீரர் மொயின் அலிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அடுத்த 10 நாட்களுக்கு மொயின் அலி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருப்பார். இலங்கை அரசின் விதிமுறைகளின்படி மொயின் அலிக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மொயின் அலியுடன் நெருக்கமாக இருந்த கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு, அடுத்த சில நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டு, அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடிக்கும் இங்கிலாந்து அணி அடுத்தாக இந்தியாவுக்கு வருகின்றனர். இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x