Last Updated : 04 Jan, 2021 10:11 AM

 

Published : 04 Jan 2021 10:11 AM
Last Updated : 04 Jan 2021 10:11 AM

இந்திய அணி வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை: பரிசோதனையில் நெகட்டிவ் என பிசிசிஐ தகவல்

கோப்புப்படம்

மெல்போர்ன்


இந்திய அணி வீரர்களுக்கும், அணியில் உள்ள பிற ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சிட்னியில் வரும் 7-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் இன்று சிட்னிக்கு இந்திய அணியினர் புறப்படுகின்றனர். அதற்கு முன்னதாகநேற்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

புத்தாண்டைக் கொண்டாட இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்வி ஷா, ஷைனி, ஷூப்மான் கில் ஆகியோர் பயோ பபுள் பாதுகாப்பை மீறி ஹோட்டலில் சென்று சாப்பிட்டது சர்ச்சையானது. இதையடுத்து, இந்த 5 வீரர்களும் கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த 5 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்திய அணியுடன் சேர்ந்து இந்த 5 வீரர்களும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்திய வீரர்கள் பயோ-பபுள் பாதுகாப்பை மீறி சென்று ஹோட்டலில் சாப்பிட்டது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதுகுறித்து பிசிசிஐ சார்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பி்ல், “ இந்திய அணி வீரர்களுக்கும், பிற ஊழியர்களுக்கும் ஜனவரி 3 ம்தேதி கரோனா பரிசோதனை ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இந்திய அணி வட்டாரங்கள் கூறுகையில் “ புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் 5 பேர் ஹோட்டலில் சென்று சாப்பிட்டாலும், அவர்கள் முறையாக கரோனா விதிமுறைகளைப்பின்பற்றிதான் சென்றுள்ளார்கள். ஆனால், ஆஸ்திரேலிய ஊடகங்கள்தான் இதை பெரிதுபடுத்துகின்றன.

வீரர்கள் யாரும் இந்த விமர்சனங்களை கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் நோக்கம் முழுவதும் சிட்னி டெஸ்ட்டில் வென்று 2-1 என்று முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x