Published : 03 Jan 2021 02:37 PM
Last Updated : 03 Jan 2021 02:37 PM

பிரிஸ்பேனில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், விளையாட வராதீர்கள்: இந்திய அணிக்கு குயின்ஸ்லாந்து அரசு கண்டிப்பு


பிரிஸ்பேன் நகரில் கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளைக் கடைபிடிக்காவி்ட்டால் இந்திய அணியினர் இங்கு விளையாட வராதீர்கள் என்று குயின்ஸ்லாந்து அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், இரு அணி வீரர்களும் பயோ-பபுள் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால், அணியின் குழுவைத் தவிர வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயோபபுள் சூழலை மீறி எங்காவது சென்றுவிட்டால், அணிக்குள் கரோனா பரவல் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்விஷா, நவ்தீப் ஷைனி, ஷூப்மான் கில் ஆகிய 5 பேர் பயோ பபுள் சூழலை மீறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

அந்த ஹோட்டலுக்கு வந்த இந்திய ரசிகர் நவால்தீப் சிங், இந்திய வீரர்களைப் பார்த்து மகிழச்சி அடைந்து அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணத்தை செலுத்திவிட்டு, செல்பி எடுத்துச் சென்றார். இந்தப் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியில் ரிஷப்பந்தை கட்டித் தழுவியதாக நவால்தீப் சிங் வெளியி்ட்டார்.

இதையடுத்து, ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி, புத்தாண்டு தினத்தன்று பயோபபுள் சூழலை மீறி வெளியே சென்ற இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ஷூப்மான் கில், ஷைனி, ரிஷப்பந்த் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்” என அறிவித்தது.

இதற்கிடையே சிட்னி டெஸ்ட் முடிந்தபின் 4-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியினர் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரிஸ்பேனுக்கு செல்ல உள்ளனர். ஆனால், குயின்ஸ்லாந்து வரும் மக்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியினர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதுபோல் குயின்ஸ்லாந்திலும் செயல்படக்கூடாது. விதிமுறைகளுக்கு கட்டுப்படாவிட்டால் இங்கு வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் கூறுகையில் “ குயின்ஸ்லாந்து அரசின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இந்திய வீரர்கள் செயல்பட வேண்டும். விதிமுறைகள் என்பது வாய்ப்பு அல்ல. இந்திய வீரர்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், இங்குவந்து விளையாட வரவேண்டாம்” எனக் கண்டிப்புடன் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சர் டிம் மேண்டர் கூறுகையில் “ கரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு இங்கு இடமில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் இங்கு ஒரே விதிமுறைதான். 4-வது டெஸ்ட் போட்டிக்காக பிரிஸ்பேன் வரும் இந்திய வீரர்கள் விதிமுறைகளை மதிக்கமாட்டோம், கடைபிடிக்கமாட்டோம் என்றால், அவர்கள் இங்கு வரக்கூாடது. இதேவிதிமுறை அனைவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x