Last Updated : 02 Jan, 2021 05:28 PM

 

Published : 02 Jan 2021 05:28 PM
Last Updated : 02 Jan 2021 05:28 PM

புத்தாண்டில் கரோனா விதிமுறை மீறல்?: ஆஸியில் உள்ள இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கோப்புப்படம்

சிட்னி


புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், இரு அணி வீரர்களும் பயோ-பபுள் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால், அணியின் குழுவைத் தவிர வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயோபபுள் சூழலை மீறி எங்காவது சென்றுவிட்டால், அணிக்குள் கரோனா பரவல் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்விஷா, நவ்தீப் ஷைனி, ஷூப்மான் கில் ஆகிய 5 பேர் பயோ பபுள் சூழலை மீறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

அந்த ஹோட்டலுக்கு வந்த இந்திய ரசிகர் நவால்தீப் சிங், இந்திய வீரர்களைப் பார்த்து மகிழச்சி அடைந்து அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணத்தை செலுத்திவிட்டு, செல்பி எடுத்துச் சென்றார். இந்தப் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியில் ரிஷப்பந்தை கட்டித் தழுவியதாக நவால்தீப் சிங் வெளியி்ட்டார்.

இந்திய வீரர்கள் பயோபபுள் சூழலை மீறி வெளியேவந்து ஹோட்டலில் சாப்பிட்டதை ஆஸ்திரேலிய ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தி சிட்னி ஹெரால்டு வெளியிட்ட செய்தியில், “ இந்திய வீரர்கள் பயோபபுள் சூழலை மீறி ஹோட்டலில் சென்று சாப்பிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை பிசிசிஐ அமைப்பும், ஆஸ்திரேலிய வாரியமும் எந்த அறிக்கையும் விடவில்லை. ஹோட்டலில் சென்று வீரர்கள் சாப்பிட்டது பயோபபுள் விதிகளை மீறியதாகும் “ எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் ஓர் அறிக்கை வெளியிட்டது, அதில் “ இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி, புத்தாண்டு தினத்தன்று பயோபபுள் சூழலை மீறி வெளியே சென்ற இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ஷூப்மான் கில், ஷைனி, ரிஷப்பந்த் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பயிற்சிக்குச் செல்லும் போது இந்த 5 வீரர்களும் தனிமையாகச் செல்வார்கள், பயிற்சியில் ஈடுபடுவார்கள். பிக்பாஷ் லீக்கில் இதுபோன்று இரு வீரர்கள் விதிமுறைகளை மீறியதால், தனிமைப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிசிசிஐ மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இணைந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.

பிசிசிஐ தரப்பில் அதிகாரிகள் கூறுகையில் “ இந்திய வீரர்கள் சிலர் ஹோட்டலில் உணவு உண்டது உண்மைதான். ஆனால், அனைத்து கரோனா விதிமுறைகளையும் பின்பற்றித்தான் சென்றுள்ளார்கள். அவர்கள் முறையாக உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசிங் செய்யப்பட்டுதான் உணவு சாப்பிட்டார்கள். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. இதில் முக்கியமான விஷயம், புகைப்படம் எடுத்த ரசிகர் ரிஷப்பந்தை கட்டித்தழுவினாரா என்பதுதான் கேள்வி”எ னத் தெரிவித்தார்.

இந்திய வீரர்களுடன் செல்பி எடுத்த ரசிகர் நவால்தீப் சிங் பதிவிட்ட விளக்கத்தில், “ ஹோட்டலில் இந்திய வீரர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்களுடன் புகைப்படம் எடுத்தேன். ஆனால், ரிஷப்பந்தை கட்டித்தழுவவில்லை. சமூக விலகலைப் பின்பற்றித்தான் இருந்தோம். தவறான தகவலை முன்புநான் பதிவிட்டமைக்கு மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x