Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
கரோனா வைரஸின் தாக்கத்தால் 2020-ம் ஆண்டில் மிகவும் பாதிக்கப்பட்ட துறை என்று விளையாட்டுத் துறையைக் கூறலாம். ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை பல போட்டிகள் இந்த ஆண்டில் கரோனாவால் தடைபட்டன. அதனாலேயே இந்த ஆண்டில் விளையாட்டுத் துறையில் அதிக நாயகர்களும் உருவாகவில்லை.
ஆனால் இதையெல்லாம் கடந்து, இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் நாயகன் நடராஜன். இந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக யார்க்கர் மேல் யார்க்கர்களை வீசிய நடராஜன், இதனாலேயே ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட, அங்கும் சோடை போகாமல் விக்கெட்களை அள்ளி இந்தியாவின் வெற்றிக்கு துணைபுரிந்துள்ளார்.
தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள சின்னப்பம்பட்டிதான் நடராஜனின் சொந்த ஊர். அப்பா தங்கராசு தறி வேலை பார்ப்பவர். அம்மா சாந்தா, தெருவோரத்தில் கோழிக்கடை வைத்திருந்தார். நடராஜனுக்கு 3 தங்கைகள், ஒரு தம்பி. நடராஜனுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது கனவு. வீட்டில் உள்ளவர்களோ, அவர் படித்து முடித்து ஏதாவது வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இந்தச் சூழலில் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பை நடத்திவரும், ஜெயப்பிரகாஷ் என்பவர் நடராஜனுக்கு உதவ முன்வர, அவரது வாழ்க்கை பயணம் பிஎஸ்எல்வி ராக்கெட் போல் ஜிவ்வென வேகமெடுத்தது.
காயங்கள், தடைகள் என பல விஷயங்களைக் கடந்து வாழ்க்கை யில் சாதித்துள்ளார் நடராஜன். பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு கிராமங்களில் இருந்தும் நாயகர்களாக உயர்ந்தெழ முடியும் என்பதை நிரூபித்த நடராஜன், 2021-ல் மேலும் சாதிப்பார் என்று நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT