Published : 29 Dec 2020 04:04 PM
Last Updated : 29 Dec 2020 04:04 PM

தீவிரமாக ஆட வேண்டும் என்று நினைத்தோம்; வென்றோம்: கேப்டன் ரஹானே பேட்டி

முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு இரண்டாவது ஆட்டத்தில் தீவிரமான அணுகுமுறையைக் காட்ட வேண்டும் என்று நினைத்ததாகவும், அதைச் செய்ததில் வெற்றி கண்டோம் என்றும் இந்திய அணியின் கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது

2-வது ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் சதமடித்ததால் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பிறகு ரஹானே தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது:

"அத்தனை வீரர்களையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். அறிமுக வீரர்கள் கில் மற்றும் சிராஜுக்குப் பாராட்டுகள். அவர்கள் மன உறுதியைக் காட்டிய விதம் சிறப்பாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக உமேஷை இழந்தோம். ஆனால், அனைவருக்கும் பாராட்டுகள். ஐந்து பேர் கொண்ட பந்துவீச்சு கூட்டணி சாதகமாக இருந்தது. ஒரு ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும் என்று நினைத்தோம், ஜடேஜா அந்த இடத்தை சிறப்பாக நிரப்பினார். ஷுப்மன் முதல்தர கிரிக்கெட்டில் நான்றாக ஆடியிருக்கிறார். இதில் நல்ல தீவிரமும், ஒழுக்கமும், நிதானத்தையும் காட்டியிருக்கிறார். சிராஜ் ஒழுக்கமாக பந்து வீசினார்.

சில சமயங்களில் அறிமுகமான போட்டிகளில் அந்த மலைப்பிலேயே கோட்டை விடுவோம். ஆனால் 4-5 வருடங்கள் முதல் தர கிரிக்கெட் ஆடியவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். அது கேப்டனின் வேலையை எளிதாக்கிவிடும்.

அணிக்குள் நாங்கள் பேசிக்கொண்டதே இன்னும் தீவிரமான அணுகுமுறையை, மன உறுதியைக் காட்ட வேண்டும் என்பதே. அடிலெய்டில் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தைப் பறிகொடுத்தோம். ஆனால் இன்னும் நாங்கள் கற்க நிறைய இருக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது. குறிப்பாக கடைசி ஐந்து விக்கெட்டுகள்.

சென்ற போட்டியின் தோல்வியை நினைத்து துவண்டு போயிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தோம். அனைவரும் சேர்ந்து முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். நடக்கவில்லை. அதனால் ஒழுக்கத்துடன் துல்லியமாகப் பந்துவீச வேண்டியிருந்தது. அதைச் சிறப்பாகச் செய்தோம். குறிப்பாக அஸ்வின், 10-வது ஓவரிலேயே பந்துவீச வந்து எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கினார்.

உமேஷ் தேறி வருகிறார். ரோஹித் மீண்டும் அணிக்குள் வருவதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவருடன் நேற்று பேசினேன். அவரும் அணியுடன் சேர்வதில் உற்சாகமாக இருக்கிறார்."

இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x