Last Updated : 28 Dec, 2020 07:15 AM

 

Published : 28 Dec 2020 07:15 AM
Last Updated : 28 Dec 2020 07:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய விளையாட்டின் சூப்பர் மேன்

இந்திய விளையாட்டுத் துறையின் சூப்பர் மேன் என்று எம்.ஜே.கோபாலனைச் சொல்லலாம். ஒரே நேரத்தில் இந்திய ஹாக்கி அணியிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்ற பெருமை அவருடையது. இப்படி ஒரே நேரத்தில் 2 விளையாட்டுகளுக்கான அணியிலும் இடம்பெற்ற அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

1909-ம் ஆண்டு தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொரப்பாக்கத்தில் எம்.ஜே.கோபாலன் (மொரப்பாக்கம் ஜோஸ்யம் கோபாலன்) பிறந்தார். கோபாலனுக்கு சிறு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர், சென்னை திருவல்லிக்கேணிக்கு இடம்பெயர்ந்தனர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளில் கோபாலன் வல்லவராக இருந்தார்.

1930-ம் ஆண்டு மெட்ராஸ் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தனது ஆற்றலால் 1933-34-ம் ஆண்டு சீசனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நடந்த இப்போட்டியில் அவர் 39 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் முதலாவது ரஞ்சி கோப்பை தொடரின் முதலாவது பந்தை வீசிய பெருமையும் இவருக்கு உண்டு. ஹாக்கி விளையாட்டிலும் சிறந்தவரான இவர் இந்திய அணிக்காக 39 ஹாக்கி போட்டிகளில் ஆடியுள்ளார். 1936-ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹாக்கி அணிக்கு கோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் தேர்வானார். ஹாக்கியைவிட கிரிக்கெட்டை அதிகம் விரும்பிய கோபாலன், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்தியாவுக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியபோதிலும், 78 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர், 2,916 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் தனது பந்துவீச்சால் 194 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x