Published : 27 Dec 2020 01:05 PM
Last Updated : 27 Dec 2020 01:05 PM

அருமையான கேப்டன்ஷிப், நேர்த்தியான ஃபீல்டிங் அமைப்பு: ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான்கன் புகழாரம்

இந்திய அணியின் கேப்டன் ரஹானே : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வரும் ரஹானேவின் தலைமையை முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில்தான் 2-வது டெஸ்ட் போட்டி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாத நிலையில் ரஹானே அணியை வழிநடத்தி வருகிறார்.

2-வது டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மெல்போர்ன் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்னில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸி. அணி ஆட்டமிழப்பது நேற்றுதான் முதல் முறையாகும்.

இந்திய அணிக்குத் தலைமை ஏற்று செயல்பட்ட ரஹானே தொடக்கத்திலிருந்து அருமையான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தினார். 12-வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டுவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் முகமது சிராஜை தொடக்கத்திலேயே பந்துவீச அழைக்காமல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறும்போது, சிராஜை பந்துவீசச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் குழப்பும் வகையில் அவ்வப்போது ஃபீல்டிங் முறையை மாற்றியும் அவர்களை அடிக்கவிடாமல் ரஹானே செய்தார். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு சொல்லிவைத்தாற்போல் ஃபீல்டிங் செட் செய்து அவரை இந்த முறையும் டக்அவுட்டில் வெளியே வைத்தது ரஹானேவின் சிறப்பாகும்.

சிறப்பாகச் செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருட்டிய இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கும், திட்டத்தைக் கச்சிதமாகச் செயல்படுத்திய ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான்கள், சேவாக், விவிஎஸ் லட்சுமண், ஷேன் வார்ன் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கதத்தில் ரஹானே குறித்துக் கூறுகையில், “ஸ்மார்ட்டான ஃபீல்டிங் அமைப்பு முறை. ரஹானேவிடம் இருந்து ஸ்மார்ட்டான ஃபீல்டிங் அமைப்பு முறை, பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியதைக் கண்டேன். அஸ்வின், பும்ரா, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு அபாரம். முதல் நாளிலேயே ஆஸி. அணியை 195 ரன்களில் சுருட்டியது இந்திய அணியின் மிகப்பெரிய முயற்சி. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வி.வி.எஸ்.லட்சுமண் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை அருமையாகச் செயல்பட்டுள்ளார்கள். இரு அறிமுக வீரர்களுமே நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அதிலும் ரஹானேவின் கேப்டன்ஷிப் அற்புதம். அடியெல்ட் தோல்வி குறித்த எந்தச் சுமையையும் மனதில் வைக்காமல் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் பதிவிட்ட கருத்தில், ''மெல்போர்ன் மைதானத்தில், கிரிக்கெட்டில் பயங்கரமான நாள். நீண்ட காலத்துக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தை அருமையாகத் தயாரித்த களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகள். இதுபோன்றே அனைத்து ஆடுகளங்களையும் அமையுங்கள். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினார்கள். அதிலும் கேப்டன் ரஹானே அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். இந்திய அணி நாளை முழுவதும் பேட் செய்ய முடியுமா?'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x