Last Updated : 25 Dec, 2020 05:04 PM

 

Published : 25 Dec 2020 05:04 PM
Last Updated : 25 Dec 2020 05:04 PM

நாளை பாக்ஸிங்டே டெஸ்ட்: 100-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு? ஆஸி.யிடம் தாக்குப் பிடிக்குமா கோலி, ஷமி இல்லாத இந்தியா அணி? 


மெல்போர்னில் இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இடம் மட்டும் மாறவில்லை, பந்தும் மாறியுள்ளது. பிங்க் நிறப்பந்திலிருந்து சிவப்புநிற கூக்கபுரா பந்துக்கு இரு அணிகளும் திரும்புகின்றன.

கேப்டன் கோலி, பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாத நிலையில் எவ்வாறு ஆஸ்திரேலியே அணியை இந்திய அணி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடிலெய்டில் வாங்கிய அடியிலிருந்து இந்திய அணி மனரீதியாக எழுந்திருக்க வேண்டியது அவசியம். அதிலும் கோலி, ஷமி இல்லாத நிலையில் அணியில் 4 மாறங்கள் செய்யப்பட்டுள்ளன. சுப்மான் கில், ரவிந்திர ஜடேஜா, ரிஷப்பந்த், முகமது சிராஜ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பேட்டிங்கிற்கு அதிகமான முக்கியத்துவம் அளித்துள்ள மாற்றம் மகிழ்ச்சி அளித்தாலும், மெல்போர்ன் ஆடுகளத்தில் முதல் இரு நாட்கள் மிக முக்கியமானது. முதல் இரு நாட்களில் தாக்குப்படித்து விளையாடிவிட்டால், அடுத்த 3 நாட்களுமே பேட்டிங் செய்யும் அணிக்கு சொர்க்கமாக அமையும்.

கடந்த 2018-ம் ஆண்டு பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி புரட்டி எடுத்து 100 ரன்களுக்கு மேல் வென்றது நினைவிருக்கும். அதுபோன்றதொரு சம்பவம் இந்த முறையும் நடந்தால் பார்க்கவும், கேட்கவும் அழகாகவும், இனிமையாகவும் இருக்கும்.

இதுவரை இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 28 போட்டிகளில் இந்திய அணியும், 43 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ள. 27 போட்டிகள் டிரா ஆகியுள்ளன, ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது. ஆதலால் இந்த ஆட்டம் 100-வது டெஸ்ட் போட்டி என்பதால், இரு அணிகளில் யார் வெற்றிபெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மெல்போர்ன் ஆடுகளம் தட்டையான ஆடுகளம். மெல்போர்ன் மண்ணில் ஆடுகளம் தயாரிக்கப்படாமல் வெளியிலிருந்து பிட்ச் செய்து கொண்டுவரப்பட்டு பதி்க்கப்பட்டுள்ளது. ஆதலால், ஆடுகளத்தில் முதல் இரு நாட்கள் ஈரத்தன்மையுடன் பந்து மெதுவாக வரும்.

ஆடுகளம் காய்ந்தபின் பவுன்ஸருக்கு நன்கு ஒத்துழைக்கும், பேட்ஸ்மேன்களும் நிலைத்து ஆட வசதியாக இருக்கும். ஆதலால், முதலில் பேட் செய்யும் விரைவாக விக்கெட்டை இழக்காமல் இருப்பது அவசியமாகும். ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும் விதம் போட்டியை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லும் நோக்கில் இரு அணிகளும் அதிகமாக ஸ்கோர் செய்யும் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை கில் அணிக்குள் அறிமுகமாவது நம்பிக்கை அளிக்கிறது. பிரித்வி ஷா போல் அல்லாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சுக்கு ஏற்றால்போல் கால்களை நகர்த்தி ஆடுவதால் கில் பேட்டிங் மீது நம்பிக்கை இருக்கிறது. பவுன்ஸர் வீசினால்கூட எதிர்த்து நின்று ஹூக் ஷாட்டில் அடிக்கும் துணிச்சல் சுப்மான் கில்லுக்கு இருக்கிறது.

மயங் அகர்வால், ஹனுமா விஹாரி இருவரும் தங்களின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். கோலி இல்லாத நிலையில் அவரின் இடத்தில் யார் களமிறங்குவார் என்பது கேள்வியாக இருக்கிறது. கேப்டன் ரஹானே நடுவரிசையில் களமிறங்கினால் பேட்டிங் வரிசை வலுப்படும். ஏனென்றால், ரிஷப்பந்த், ஜடேஜா, அஸ்வின் இருப்பதால், 8-வது வீரர்கள்வரை பேட்டிங் செய்யலாம்.

புஜாரா கடந்த போட்டியில் ஆமை வேக்தில் ஆடினார். டிபென்ஸ் விளையாட்டு விளையாடலாம், ஆனால், பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, அணிக்கு ஸ்கோர் செய்யும் விதத்தில் பேட்டிங் இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் புஜாரா தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி, அதிகமான ஷாட்களை ஆடினால் விரைவாக ஸ்கோர் செய்ய முடியும்.

பயிற்சிப் போட்டியில் ரிஷப்பந்த் அதிரடியாக ஆடியது ஆறுதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீ்ச்சில் ஆக்கோரஷமாக வீசி, லைன் லெத்தில் போடும்போது அவர்களின் நம்பிக்கையை உடைக்க ரிஷப்பந்த் போன்ற ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பது அவசியம்.

முகமது சிராஜ் இந்தப் போட்டியில்தான் அறிமுகமாகிறார். பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அறிமுகமாகும் பந்துவீச்சாளர்கள் மனவேதனையோடுதான் திரும்பியுள்ளார்கள், வெளுத்து வாங்கித்தான் ஆஸி. பேட்மேன்கள்அனுப்புவார்கள். அதுபோன்ற நிலை சிராஜுக்கு வராமல் இருக்கும் வகையில் பந்துவீச்சு அமைய வேண்டும்.

சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை அஸ்வின் எந்த ஆடுகளத்துக்கும் தன்னை தகவமைத்து பந்துவீச்சை வெளிப்படுத்துக்கூடியவீரர். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சு மெல்போர்னில் எடுக்குமா எனத் தெரியவில்லை. லாபுஷேன், ஸ்மித் இருவரும் ஃபார்முக்கு வந்து நிலைத்துவிட்டால் ஜடேஜாவிடம் பந்துவீச்சு கொடுக்காமல் இருப்பது இந்திய அணிக்கு நல்லது.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை இந்திய அணியின் பலவீனத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் பந்துவீச்சை நம்பி இருக்கிறது. அதனால்தான் அணியில் மாற்றம் செய்யாமல் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் ஃபார்முக்கு வராத ஜோ பர்ன்ஸ், ஸ்மித், லாபுஷேன், மேத்யூ வேட் ஆகியோர் நிலைத்துவிட்டால் இந்திய அணியின் நிலை பரிதாபமாகப் போய்விடும்.

டாஸ் வென்று ஒருவேளை ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தால் அதைப் பயன்படுத்தி இந்தியப் பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஏனென்றால், ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், பிங்க் பந்துகள் போல் அல்லாமல் சிவப்புநிற கூக்கபுரா பந்துகள் ஸ்விங் செய்யவும், பவுன்ஸர் வீசவும் எளிதாக இருக்கும்.

இந்திய அணி வழக்கமான டெஸ்ட் ஆட்டம் போல் டிஃபென்ஸ் ப்ளே கொண்டு பேட் செய்யாமல், தொடக்கத்திலிருந்தே ஷாட்களை ஆடத் தொடங்கினால், ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் வகுத்து வைத்துள்ள வியூகங்களை உடைக்க முடியும்.

அடிலெய்ட் போட்டியைப் போன்று சப்பென்று ஆட்டம் முடிந்துவிடாமல் மெல்போர்ன் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும் என நம்பலாம். இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. அதிகாலை நேரத்தில், அமைதியான காலைப்பொழுதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது என்பது ரம்மியமானது. இரு நாட்களும் விடுமுறை என்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x