Last Updated : 25 Dec, 2020 04:16 PM

 

Published : 25 Dec 2020 04:16 PM
Last Updated : 25 Dec 2020 04:16 PM

முகமது அமிரின் முடிவு பாகிஸ்தான் அணிக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: இன்ஸமாம் உல் ஹக் வேதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் : கோப்புப்படம்

கராச்சி


வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிரின் திடீர் ஓய்வு அறிவிப்பு, வாரியத்தின் மீதான குற்றச்சாட்டு போன்ற சம்பவங்கள் பாகிஸ்தான் அணிக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல்ஹக் தெரிவித்தார்.

27வயதான பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்தவாரம் அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக அளித்த டார்ச்சர், பயிற்சியாளர்கள் வக்கார் யூனுஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் செயல்பாடுகளால்தான் மனம் வெறுத்து ஓய்வு அறிவிக்கிறேன். அணியில் உள்ள வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு முகமது அமிர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் முகமது அமிரின் குற்றச்சாட்டு, வீடியோவும் பாகிஸ்தான் அணிக்குள் எதிர்மறையான தாக்கத்தை வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. அது உண்மை என நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

லாகூரில் ஊடகம் ஒன்றுக்கு இன்சமாம் உல் ஹக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

முகமது அமிரின் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை அணியின் பந்துவீச்சு மற்றும் வலிமையில் ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து விளையாடி வருகிறோம். என்னைப் பொருத்தவரை கவலையளிப்பது என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்கள் எங்களின் அணியின் கிரிக்கெட், கிரிக்கெட் உலகில் எங்களின் தோற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அமிரின் சம்பவம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என உணர்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்த்திருப்பதுதான் சிறந்தது. முகமது அமிர் இதுபோன்ற துரதிருஷ்டமான முடிவு எடுக்கும் முன் தனக்கிருக்கும் வாய்ப்புகளை நன்கு கவனித்திருக்க வேண்டும்.

அணியில் உள்ள ஒரு சிலர் மீது முகமது அமீருக்கு அதிருப்தி இருந்திருந்தால், முதலில் வெளிப்படையாக தலைமைப் பயிற்சியாளரிடம் பேசி இருக்க வேண்டும். தேவைப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் பேசிவிட்டு, என்ன செய்யலாம் என முடிவு செய்திருக்கலாம்.

வக்கார் யூனுஸுடன் அமிருக்கு முரண்பாடு இருந்தது. அதை பேசித் தீர்த்திருக்கலாம். ஒருவேளை யாரும் அமிருக்கு ஒத்துழைத்து செல்லவில்லை என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்

இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x