Published : 23 Dec 2020 06:42 PM
Last Updated : 23 Dec 2020 06:42 PM

கால்பந்து ஜாம்பவான் பீலேயின் சாதனையை முறியடித்த லயோனல் மெஸ்ஸி

பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி : படம் உதவி ட்விட்டர்

பார்சிலோனா

கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேயின் சாதனையை பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிவரும் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

ஒரே கிளப்புக்காக நீண்ட காலம் விளையாடி அதிகமான கோல்கள் அடித்து பீலேயின் சாதனையை மெஸ்ஸி முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பார்கா எனப்படும் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார்.

லா லிகா லீக் கால்பந்து ஆட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெலன்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடித்தபோது, பீலேயின் 643-வது கோலை சமன் செய்தார். இந்தப் போட்டியில் வெலன்சியா அணியை 3-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வென்றது.

இந்நிலையில் பார்சிலோனாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் சோசிடாட் அணியை 2-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வென்றது. இந்த ஆட்டத்தில் பார்கா அணியின் 18 வயது வீரர் பெட்ரோ கோல்சாலேஸ் தட்டிக் கொடுத்த பந்தை மெஸ்ஸி அருமையான கோலாக மாற்றினார்.

இந்த கோல் அடித்ததன் மூலம் கால்பந்து ஜாம்பவான் பீலியேன் 643 கோல் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் ஒரே கிளப்புக்காக நீண்டகாலம் விளையாடி 644 கோல்கள் அடித்த முதல் வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை மெஸ்ஸி பதிவு செய்தார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த பீலே பிரேசிலின் சைட் சான்டோஸ் என்கிற கிளப்புக்காக, 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் விளையாடினார். 19 சீசன்களில் விளையாடிய பீலே ஒட்டுமொத்தமாக 643 கோல்களைப் பதிவு செய்தார் இதுதான் சாதனையாக இருந்து வந்தது.

அடுத்ததாக, முனிச் அணிக்காக ஆடி ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் 570 கோல்களும், போர்ச்சுக்கல் அணி வீரர் ஃபெர்னான்டோ பெய்ரோட்டியோ லிஸ்பன் அணிக்காக விளையாடி 569 கோல்களும், செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 542 கோல்கள் அடித்திருந்தனர்.

பீலேவின் சாதனையை முறியடித்துள்ளது குறித்து இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவிட்டுள்ள கருத்தில் “ நான் கால்பந்து விளையாடத் தொடங்கியபோது, இந்த சாதனையை முறியடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.

பீலேவுக்கு சொந்தமான சாதனையை இன்று முறியடித்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு உதவியவர்கள், என்னுடைய சக அணியினர், குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவு அளித்தவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவில் பிறந்து ஸ்பெயினின் பார்கா (பார்சிலோனா) அணிக்காக விளையாடி வருபவர்தான் லயோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா, பார்சிலோனா அணிகளின் கேப்டன் மற்றும் ஃபார்வேர்ட் வீரராக மெஸ்ஸி செயல்பட்டு வருகிறார்.

கால்பந்து உலகில் தலை சிறந்த வீரராகக் கருதப்படும் மெஸ்ஸி இதுவரை பிரான்ஸ் பத்திரிகை வழங்கும் பாலன் டி ஓர் விருதுகளை 6 முறையும், ஐரோப்பிய தங்க ஷூக்களை6முறையும் மெஸ்ஸி வென்றுள்ளார்.

லா லிகா கால்பந்து தொடரில் தற்போது பார்சிலோ அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து விளையாடிவரும் மெஸ்ஸி, லா லிகா, ஐரோப்பியன் சாம்பியன், கோபா டெல் ரே உள்ளிட்ட 33 கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.

லா லிகாவில் மட்டும் மெஸ்ஸி இதுவரை 451 கோல்கள் அடித்துள்ளார், லா லிகாவில் அதிகமான ஹாட்ரிக் கோல்கள் அடித்தவகையில் 36 ஹாட்ரிக் கோல்களை மெஸ்ஸி அடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல ஐரோப்பிய லீக்கில் 8 முறை, கோபா அமெரிக்காவில் 12 முறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x