Published : 20 Dec 2020 08:09 AM
Last Updated : 20 Dec 2020 08:09 AM

டிச.19; மறக்க முடியுமா இந்த நாளை? 2016-ல் எழுச்சி; 2020-ல் வீழ்ச்சி: இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஆச்சர்ய ஒற்றுமை

சென்னை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிச.19 ம் தேதியை வீரர்களும் மறக்கமாட்டார்கள், ரசிகர்களும் மறக்கமாட்டார்கள். அடிலெய்டு டெஸ்ட்டில் மோசமான கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த எண்ணிக்கை பெற்ற இதே நாளில்தான் இந்தியா அதிகபட்ச ஸ்கோரை எட்டிய வரலாறும் பதிவு செய்யப்பட்ட ஆச்சர்ய நிகழ்வும் நடந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் தங்கள் நாடு ஏதோ ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும்போது தங்கள் நாடு வெல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி பொங்கும். வீரர்கள் போற்றப்படுவார்கள். அதே நேரம் தோல்வியைத் தழுவும்போது வீரர்கள் விமர்சிக்கப்படுவார்கள். அதே தோல்வி மோசமாக அமைந்தால் சொல்லவே வேண்டாம்.

2014-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அந்த லீக்கில் வெல்ல முடியாத அணியான பிரேசில் ஜெர்மனியுடன் நடந்த அரையிறுதிப் போட்டியில் மோசமான வகையில் 7-1 என்கிற கோல் கணக்கில் தோற்றது. அதுவும் பிரேசில் மண்ணிலேயே தோற்றது. அது மிகப்பெரிய அவமானமாகவும், துக்ககரமான நிகழ்வாகவும் பிரேசில் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

காரணம், உலகில் வல்லமை பெற்ற அணி அந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அல்ல படுதோல்வியைத் தழுவியது. அதேபோன்றதொரு நிகழ்வை இந்திய கிரிக்கெட் அணி இன்று சந்தித்துள்ளது. மிக மோசமான நிலையில் மிகக்குறைந்த ரன் பெற்ற நாளாக அது அமைந்தது.

இதற்கு முன் 1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 42 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதன் பின்னர் 46 ஆண்டுகள் கழித்து மிகக்குறைந்த ஸ்கோரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ளது. 1974-ம் ஆண்டில் இந்தியா அப்படி விளையாடியது சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால், தற்போதுள்ள இந்திய அணி வலுவான அணி, உலக அளவில் ரேங்கில் 3-வது இடத்தில் உள்ள நாடு, உலகக்கோப்பை போட்டிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள நாடு இந்தியா. இப்படி ஒரு மோசமான தோல்வியைத் தழுவியதை இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மோசமான தோல்வியை மறக்க முடியாத நாளாக டிச.19 அமைந்துள்ளது. அதே நேரம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாகசம் நிறைந்த நாளாகவும் இதே டிச.19 அமைந்துள்ளது ஆச்சர்ய நிகழ்வு. ஒரே நாளில் இரு வேறு வரலாற்றுச் சம்பவங்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்துள்ளது சுவாரஸ்யமான ஒன்றுதான்.

மிக மோசமாகத் தோல்வியைத் தழுவி, குறைந்தபட்ச ஸ்கோரை (36/9) பதிவு செய்த இதே நாளில்தான் மிக அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரையும் இந்தியா பெற்றிருக்கிறது. அது 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணி அலைஸ்டர் குக் தலைமையில் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் டிரா, மற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் வென்றிருந்த கோலி தலைமையிலான இந்திய இளம்படை 5-வது டெஸ்ட் போட்டியிலும் வென்று இங்கிலாந்தை வொயிட் வாஷ் செய்தது இதே டிச.19-ல் தான்.

2016-ல் சென்னையில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸ் மட்டுமே ஆடிய இந்தியா 759 ரன்களைக் குவித்தது. கருண் நாயர் 303 ரன்களும் இந்திய கிரிக்கெட்டில் ஷேவாக்கிற்குப் பிறகு முன்னூறு ரன்களை எடுத்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இந்தப் போட்டியில் பல சாதனைகளை கருண் நாயர் படைத்தார்.

முதல் டெஸ்ட் சதத்தை 300 ரன்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையும் கிடைத்தது. குறைந்த வயதில் 300 ரன்களை அடித்த வீரர் என்கிற பெருமையும் பெற்றிருந்தார். கே.எல்.ராகுல் 199 ரன்கள் எடுத்தார். (இரட்டைச் சத வாய்ப்பை ஒரு ரன்னில் மோசமாக வைடு பாலை கட் செய்ய முயன்று ஆட்டமிழந்த கே.எல்.ராகுல் அதன் பின்னர் இரட்டைச் சதத்தை எட்டவே இல்லை).

ஜடேஜா 2-வது இன்னிங்ஸில் 48 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் இரண்டு இன்னிங்ஸிலும் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுதான் ஜடேஜாவின் அதிகபட்ச டெஸ்ட் விக்கெட். இந்தியா ஒரே இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது. அதில் மொத்த ஸ்கோர் 759. இதுதான் இந்தியாவின் உச்சபட்ச ஸ்கோர். அந்தப் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 477 ஆல் அவுட், பின்னர் ஆடிய இந்தியா 759 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 281-ல் ஆட்டமிழந்ததால் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

ஒரே நாளில் நடந்த இருவேறு நிகழ்வுகள் ஆச்சர்யமான ஒன்றுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x