Published : 19 Dec 2020 02:23 PM
Last Updated : 19 Dec 2020 02:23 PM

எங்கள் பக்கம் தீவிரமான ஆட்டம் இல்லை: மோசமான தோல்விக்குப் பிறகு கோலி கருத்து

இந்திய அணி வீரர்கள் தீவிரமாக ஆடவில்லை என்றும், அந்தத் தீவிரம் இல்லாமல் போனதுதான் தோல்விக்குக் காரணம் என்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.

இதுவரை இந்திய அணி எடுத்திருப்பதில் மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்பதால் இணையத்தில் இந்திய அணியின் பேட்டிங் சரமாரியாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் காயம் ஏற்பட்டு அவரால் மேற்கொண்டு விளையாட முடியாமல் போனது. தோல்வி குறித்தும், ஷமி குறித்தும் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

"இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். 60 ரன்கள் முன்னிலை பெற்றும் பேட்டிங்கில் மொத்தமாகச் சரிந்துவிட்டோம். இரண்டு நாட்கள் கடுமையாக உழைத்து ஒரு வலிமையான நிலையில் அணியை வைத்துவிட்டு, பின் ஒரே ஒரு மணி நேரத்தில் வெற்றி பெறவே சாத்தியமில்லாத நிலையில் இருந்தது வருத்தம்தான். இன்று இன்னும்கூட தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதல் இன்னிங்ஸிலும் அவர்கள் இதே வகையான பந்துவீச்சைத்தான் காட்டினார்கள். ஆனால், இன்று நாங்கள் ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் இருந்தோம் என நினைக்கிறேன். உண்மையில் சிறப்பான பந்துகளை எதிர்கொண்டோம். ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. மனநிலையில்தான் மாற்றம் என நினைக்கிறேன். அது வெளிப்படையாகத் தெரிந்தது.

ரன் சேர்ப்பு மிகக் கடினமானது போலத் தெரிந்தது. அதனால் பந்துவீச்சாளர்களுக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. எங்கள் பக்கம் தீவிரம் குறைந்ததும், அவர்களது பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசியதும்தான் காரணம் என நினைக்கிறேன். ஷமியைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. இப்போது அவர் ஸ்கேன் எடுக்கச் செல்கிறார். அவரால் கையைத் தூக்கவே முடியவில்லை. மாலை முடிவுகள் வந்த பின் என்ன நிலை என்று தெரியும்" என்று கோலி கூறியுள்ளார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இதுகுறித்துக் கேட்டபோது, "அணியின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்றுதான் இருக்கும். இன்று நல்ல முடிவு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், கண்டிப்பாக இன்றைய ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று கோலி முடித்துக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x