Last Updated : 17 Dec, 2020 04:44 PM

 

Published : 17 Dec 2020 04:44 PM
Last Updated : 17 Dec 2020 04:44 PM

மனரீதியாக நோகடிக்கிறார்கள்; இனி பாக்.வாரியத்திடம் விளையாட முடியாது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  முகமது அமிர் திடீர் ஓய்வு

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் : கோப்புப்படம்

கராச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக என்னை நோகடிக்கிறார்கள், இவர்களிடம் என்னால் விளையாட முடியாது, ஆதலால், நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீ்சசாளர் முகமது அமிர் அறிவித்துள்ளார்.

28 வயதான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் கேல்-ஷெல் எனும் பாகிஸ்தான் இணையதளத்துக்கு வீடியோ நேர்காணல் அளித்துள்ளார். அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ள அமிர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் முகமது அமிர் கூறியிருப்பதாவது:

நான் கிரிக்கெட்டிலிருந்து விலக இதுதான் நேரம். ஏனென்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்கிறார்கள். அந்த டார்ச்சரை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுவரை அந்த டார்ச்சரை நான் சந்தித்தேன். பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தேன். பாகிஸ்தான் அணிக்காக பலவிஷயங்கள் செய்து தண்டனைதான் அனுபவித்தேன்.

தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது. ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு என்னால் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு மாதமும், அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை என்னுடைய பந்துவீச்சு குறித்து ஏதாவது ஒரு குறையை வாரிய அதிகாரிகள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதனால்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் திரும்பிவிடுவேன் அப்போது தெளிவான காரணங்களைக் குறிப்பிடுகிறேன்.

இருவருக்கு மட்டுமே நான் நன்றி சொல்ல வேண்டும். நான் தடைக் காலத்திலிருந்து திரும்பிய பின் எனக்கு முன்னாள் வாரியத் தலைவர் நிஜாம் சேத்தியும், முன்னாள் கேப்டன் அப்ரிதியும் ஆதரவு அளித்தார்கள். இருவருக்கு மட்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ”

இவ்வாறு அமிர் தெரிவித்துள்ளார்.


வேகப்பந்துவீ்ச்சாளர் அமிர் 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகினார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை மூன்று பிரிவுகளிலும் சேர்த்து வீழ்த்தியுள்ளார். ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கியதையடுத்து, அமிருக்கு கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அமிர், ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருந்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் அமிர் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து, இலங்கையில் நடந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம் பெற்று அமிர் விளையாடினார். தற்போதும் அமிர் இலங்கையில்தான் இருக்கிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையைவென்ற பாகிஸ்தான் அணியிலும், 2017-ம் ஆண்டு சாம்பியன் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியிலும் முகமது அமிர் இடம் பெற்றிருந்தார்.

முகமது அமிர் வீடியோ தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த அறிவிப்பில் “ சர்வதேச கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்று எங்கள் நிர்வாகியிடம் அமிர் தெரிவித்துள்ளார். ஆதலால் அவரை எதிர்காலப் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியில் பரிசீலிக்கமாட்டோம். அமீரின் தனிப்பட்ட முடிவு என்பதால், இதில் பாகிஸ்தான் வாரியம் எந்த கருத்தும் கூறாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x