Last Updated : 15 Dec, 2020 05:24 PM

 

Published : 15 Dec 2020 05:24 PM
Last Updated : 15 Dec 2020 05:24 PM

அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்; கேரள அணியில் ஸ்ரீசாந்த், பஞ்சாப்பில் யுவராஜ் சிங்: சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான உத்தேச அணியில் சேர்ப்பு

இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

2021-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்க இருக்கும் சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான உத்தேச கேரள அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தும், பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங்கும் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை செப்டம்பர் மாதத்தோடு முடிந்துவிட்டதால், கேரள அணிக்காக விளையாட ஸ்ரீசாந்த் மீண்டும் உத்தேச அணிக்குள் வந்துள்ளார்.

அதேபோல, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் சொந்த மாநிலத்துக்காக விளையாட விருப்பம் தெரிவித்ததையடுத்து, அவர் பஞ்சாப் அணியின் உத்தேசப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் வாழ்நாள் தடையை பிசிசிஐ விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீசாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. அந்த தண்டனைக் காலம் அனைத்தும் ஸ்ரீசாந்துக்கு கடந்த செப்டம்பர் மாதத்தோடு முடிந்தது.

இதையடுத்து, கேரள அணிக்காக மீண்டும் விளையாட ஸ்ரீசாந்த் வந்துள்ளார். 37 வயதான ஸ்ரீசாந்துக்கு உண்மையில் இது 2-வது இன்னிங்ஸாகும். கேரள அணி வெளியிட்ட உத்தேசப் பட்டியலில் ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்ஸன், ஸ்ரீசாந்த், சச்சின் பேபி, ஜலஜ் சக்ஸேனா, பாசில் தம்பி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

கேரளாவில் வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பயிற்சி முகாம் தொடங்குகிறது. அந்த முகாமில் ஸ்ரீசாந்த் பங்கேற்க உள்ளார் எனத் தெரிகிறது.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தது ஓய்வு பெற்றதாகக் கடந்த ஆண்டு அறிவித்த நிலையில், சொந்த மாநிலத்துக்காக மீண்டும் விளையாட வந்துள்ளார்.

சொந்த மாநிலத்துக்காக மீண்டும் விளையாட விருப்பமாக இருப்பதாக பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பின் செயலாளரிடம் புனீத் பாலியைச் சந்தித்து சமீபத்தில் யுவராஜ் சிங் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் யுவராஜ் சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,900 ரன்களும் (3 சதங்கள், 11 அரை சதங்கள்), 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள், 52 அரை சதங்கள் அடங்கும். 58 டி20 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் 1,177 ரன்கள் விளாசினார். இதில் 8 அரை சதங்கள் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் 304 விக்கெட்டுகளையும் யுவராஜ் சிங் வீழ்த்தியுள்ளார்.

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் யுவராஜ் சிங் இடம் பெற்று முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார்.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் காலிறுதியில் ஆஸி.க்கு எதிராக யுவராஜ் சிங் ஆடிய ஆட்டத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதேபோல 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் நினைவுகூரத்தக்கது.

இதேபோல விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணியை வழிநடத்திய பரிந்தர் சரன் பஞ்சாப் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, சண்டிகர் அணிக்குக் கடந்த ஆண்டு ஆடினார். இந்த ஆண்டு மீண்டும் பஞ்சாப் அணிக்கு விளையாட பரிந்தர் சரன் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியின் 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் முக்கியமாக மன்தீப் சிங், யுவராஜ் சிங், அபிஷேக் சர்மா, சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பரார், சித்தார்த் கவுல், பரிந்தர் சரன், அபினவ் சர்மா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x